நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க தயார் முதல்வர் தயாரா.. காங் கே ஆர் ராமசாமி சவால்!
சென்னை: நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க நாங்கள் தயார். ஆனால் முதல்வர் தயாரா என சட்டப்பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தலைவர் கே.ஆர். ராமசாமி சவால் விடுத்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது நீட் தேர்வால் 13 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் பேசப்பட்டது.
இன்று அவை தொடங்கியதும் தமிழக அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடியை புகழ்ந்து பேசினார்கள். பின்னர் அவையில் நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது.
முழக்கம்
பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையை விட்டு வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையிலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இன்பதுரை எம்எல்ஏ
இதையடுத்து சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் நீட் தேர்வை காங்கிரஸ் ஆதரிப்பதாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை கூறினார். அவரது பேச்சுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அத்துடன் திமுக- காங்கிரஸ் கூட்டணியை அதிமுக எம்எல்ஏ இன்பதுரை விமர்சித்தார்.
கூச்சல் குழப்பம்
இதனால் பிரச்சினை எழுந்தது. நீட் சட்டம் காங்கிரஸ் கட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என்று கூறினர். நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடியதாக சொன்னார்கள். சட்டசபைக்கு வெளியே இருப்பவர்களைப் பற்றி சட்டசபைக்குள் பேச அனுமதி அளிக்கக்கூடாது.
திராணி இல்லை
நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் பேச திராணி இல்லை. எல்லோரும் ஊழல் செய்து விட்டு மத்திய அரசிடம் எதிர்த்து பேச தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள். தமக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என ஆட்சியாளர்கள் பேச தயங்குகிறார்கள். இதையடுத்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து தனபால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார் என்றார் ராமசாமி.