"எங்க சொல்லுங்க.. திகாரில் இப்ப வசதி எப்படி?".. நக்கலடித்த நெட்டிசனை தெறிக்கவிட்ட எம்பி ஜோதிமணி
கிண்டலடித்த நெட்டிசனுக்கு பதிலடி தந்துள்ளார் எம்பி ஜோதிமணி
சென்னை: "நீங்க வசதியானவர் தானே.. எங்க சொல்லுங்க உங்களுக்கு Mp கோட்டாவில் கிடைக்க கூடிய ஒரு சலுகையாவது வேண்டாம் என சொல்லி இருப்பீங்களா.. திகாரில் இப்ப வசதி எப்படி? போயி நண்பர்கள் கிட்ட சொல்லுங்க" என்று எம்பி ஜோதிமணியை ட்விட்டர்வாசி ஒருவர் கிண்டலடிக்க.. அதற்கு ஜோதிமணியே நச்செனெ பதிலடி தந்துள்ளார்.. இந்த ட்வீட்கள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
நேற்றில் இருந்து ரஜினிகாந்த் மண்டபத்துக்கு வரிவிலக்கு கேட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. வழக்கமாக ரஜினி விஷயம் என்றாலே, பரபரப்பாகும் சோஷியல் மீடியா நேற்றில் இருந்து இன்னும் சூடாகி வருகிறது. ட்வீட்களும், மீம்களும், விமர்சனங்களும், விவாதங்களும் ரஜினி விவகாரத்தை வைத்து நடந்து வருகின்றன.
அந்த வகையில், கரூர் எம்பி ஜோதிமணி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. "கோடீஸ்வரர்களின் சொத்துக்கெல்லாம் வரி போடறாங்க. அதை எதிர்த்து நீதிமன்றம் போனால் அங்கே எச்சரிச்சு அனுப்பறாங்க. சிஸ்டம் சரியில்லை" என்று கிண்டலடித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். இந்த ட்வீட்டுக்கு பலரும் வந்து தங்கள் ஆதரவு கமெண்ட்களை பதிவிட்டனர்.. ஒருசிலர் மட்டும், சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறது என்று விவரித்து அது சம்பந்தமான விளக்கங்களை தந்தனர்.
அதில் ஒருவர், "நீங்க வசதியானவர் தானே.. எங்க சொல்லுங்க உங்களுக்கு Mp கோட்டாவில் கிடைக்க கூடிய ஒரு சலுகையாவது வேண்டாம் என சொல்லி இருப்பீங்களா.. சொல்லமாட்டீங்க ஏன்னா அது உங்க உரிமை.. அது மாதிரி தான்.. இது உழைத்து சாப்பிடுபவரின் உரிமை.. திகாரில் இப்ப வசதி எப்படி? போயி நண்பர்கள் கிட்ட சொல்லுங்க" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தூத்துக்குடி டூ சொத்து வரி வரை.. பாடம் கற்றுக் கொண்டே இருக்கும் ரஜினி.. ஆனால் "அதுக்கு" உதவுமா?
இந்த கேள்விக்கு ஜோதிமணியே நேரடியாக பதிலடியும் தந்துள்ளார்.. அந்த ட்வீட்டில், "நான் வசதியான MP அல்ல. சம்பளம் மட்டுமே.. அதிலும் ஆதரவற்ற முதியோர் 10 பேருக்கு மாதம் ரூ1000 - 10,000 கொடுக்கிறேன்.// MP க்கு விமானத்தில் பிஸினஸ் வகுப்பு உண்டு. ஆனால் எளிய மக்கள் பயன்படுத்தும் எகானமி வகுப்பையே பயன்படுத்துகிறேன்... தொகுதி பணி தவிர எதற்கும் MP கோட்டாவை பயன்படுத்துவதில்லை" என்று நெத்தியடி பதிலை தந்துள்ளார்.
இந்த பதிலுக்கு ஏராளமானோர் ஜோதிமணியை பாராட்டி வருகின்றனர்.. அதிலும் ஒருசிலர் "நீங்கள் செய்வதெல்லாம் ஓகே...மகிழ்ச்சி... பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்... ஆனா உங்க தலைவி பிரியங்கா காந்தி என்ன காரணத்திற்காக அரசு குடியிருப்பில் பல வருடம் இருந்து வந்தார்?!! அதை ஏன் நீங்கள் யாரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை?!! என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.