திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாகத்தான் இருக்கிறது.. காங்கிரஸ் கட்சி
Recommended Video
சென்னை: திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாகத்தான் இருக்கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து நேற்றைய தினம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே என் நேரு சலசலப்புக்குரிய வகையில் பேசினார்.
அவர் பேசுகையில் காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என கூறியிருந்தார். இது திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவதற்கான பேச்சு என புரிந்து கொள்ளப்பட்டது.
இதையடுத்து கே என் நேரு தன்னிலை விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். மற்றபடி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டும் என நான் கூறவில்லை என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் கூட்டணி சுமூகமான முறையில் உள்ளது. திமுகவுடனும் மதசார்பற்ற கட்சிகளுடனுமான கூட்டணி சிறப்பாக செயல்படும்.
மதுரை அல்லது நெல்லையில் வரும் ஜூலை 14-ஆம் தேதி தென் மாவட்டங்களின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை காங்கிரஸ் கட்சி நடத்த இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார் அழகிரி.