கொளுத்தி போட்ட திருநாவுக்கரசர்.. மீண்டும் குழம்ப போகும் காங்கிரஸ்.. லாபம் திமுகவுக்கு!
நாங்குநேரி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என திருநாவுக்கரசர் கூறினார்
சென்னை: திரும்பவும் கட்டி உருள போகிறார்கள் தமிழக காங்கிரசார்.. ஏழேழு ஜென்மம் ஆனாலும்.. தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசல் மட்டும் என்னைக்குமே தீராது.. குறையாது.. நீங்காது! இருக்கிற ஏதாவது ஒரு கோஷ்டியில் இருந்து யாராவது ஒரு தலைவர், ஏதாவது ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டுக் கொண்டேதான் இருக்கிறார். இப்போது திருநாவுக்கரசரும் அதைதான் செய்திருக்கிறார்.
நாங்குநேரியில் வசந்தகுமார் எம்பி ஆகிவிட்டதால், அங்கு இடைத்தேர்தல் நடக்க போகிறது. நாங்குநேரி தொகுதியானது காங்கிரசின் மண் எனப்படுவது.
பலமுறை காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், இடைத்தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்பட்டு வருகிறது.
எம்பி சீட்
ஆனால் இந்த நாங்குநேரியில் யார் நிற்பது என்பதுதான் போட்டியாக உருவெடுத்துள்ளது. எங்களுக்கு தந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிறது காங்கிரஸ். அதேசமயம், ஏற்கனவே எம்பி தேர்தலில் 10 சீட் அள்ளி தந்தாயிற்று. இப்போது சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமானால் ஒவ்வொரு சீட்டும் திமுகவுக்கு மிக முக்கியம். அதனால் நாங்குநேரியை விட்டுத்தர திமுக விரும்பவில்லை என்பது தற்போதைய சூழல்.
திருநாவுக்கரசர்
அதற்கேற்றபடி, "இந்த தொகுதியை திமுகவுக்குக் காங்கிரஸ் விட்டுத்தந்தால் நாங்கள் எளிதாக வெற்றிப் பெற முடியும்" என்று உதயநிதி பகிரங்கமாகவே சொல்லி இருந்தார். அதுவும், திருநாவுக்கரசர் முன்னாடியே இப்படி பேசினார். இப்படி கேட்டதற்கு திருநாவுக்கரசர் கோபித்து கொள்ளக்கூடாது என்றும் உதயநிதி சொன்னார்.
விருப்பம்
இதற்கு மாநில தலைவர் கேஎஸ் அழகிரியோ, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து, விருப்பம் என்று சொல்லி விட்டார். அப்படியானால் அழகிரிக்கு நாங்குநேரியை விட்டுத்தர எண்ணம் இல்லை என்பதுதான் இதன்மூலம் வெட்டவெளிச்சமானது. இந்த சூழ்நிலையில் இப்போது திருநாவுக்கரசர் திரும்பவும் திமுகவுக்கு சாதகமான விஷயத்தை சொல்லி உள்ளார்.
திருச்சி
திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரியில் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்று திரும்பவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருச்சியில் சொந்த செல்வாக்கால்தான் ஜெயித்தேன் என்று திருநாவுக்கரசர் சொல்லியதால் காங்கிரசுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
முக ஸ்டாலின்
இப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதியில் திமுகவை முன்னிறுத்துமாறு திருநாவுக்கரசர் கருத்து சொல்லியிருப்பது காங்கிரசுக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக, ஸ்டாலினுடன் அளவுக்கு அதிகமாக நெருக்கம் இல்லாத போக்கை கடைபிடிப்பவர்தான் திருநாவுக்கரசர். இப்போது திடீரென திமுக பக்கம் திருநாவுக்கரசர் கரிசனம் காட்ட என்ன காரணமாக இருக்கும்? என்பது புதிராகவே உள்ளது.
தலைமை
ஆனால் திருநாவுக்கரசர் இப்படி தன்னிச்சையாகவும், தலைமையை மீறியும் கருத்து சொல்லி வரும் போக்கு, எப்படியும், ஸ்டாலினுக்கும், கேஎஸ் அழகிரிக்கும் விரிசலை அதிகமாக்கவே செய்யும் என்கிறார்கள் காங். தொண்டர்கள்.
இளங்கோவன்
காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக கராத்தே தியாகராஜன் கட்சிக் கூட்டத்தில் பேசப் போக அதற்கே காண்டாகி கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த நிலையில் திருநாவுக்கரசர் பேசியிருப்பது கட்சிக்கு எதிரானதாகவே அவரது எதிர்த் தரப்பினர் பார்ப்பார்கள். குறிப்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பு கண்டிப்பாக இதை பஞ்சாயத்துக்கு இழுக்கும்.
பஞ்சாயத்து
கட்சித் தலைமையின் அனுமதியோடு திருநாவுக்கரசர் இப்படிப் பேசினாரா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் கட்சி ஆதரிக்கும் என்று இவர் எப்படிக் கூறலாம் என்று எதிர்த்தரப்பு கடுப்பாகியுள்ளதாம். ஆக, இன்னொரு பஞ்சாயத்து விரைவில் கூட்டப்படும் வாய்ப்புகளை அரசர் ஏற்படுத்தி வைத்துள்ளார்.