3 மாநிலங்களில் வெற்றி முகம்...சென்னையில் காங். தொண்டர்கள் கொண்டாட்டம்
சென்னை: 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் மாநிலங்களில் வெற்றி முகம் காட்டி உள்ளதை அடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தெலுங்கானா, மத்தியபிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்தன. இன்று காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.தெலுங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்தது. பின்னர், பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது.
தெலுங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றியை தக்க வைத்துக் கொண்டது, அதே போல், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி கனியை பறித்துள்ளது. மற்ற மூன்று மாநிலங்களில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற பிறகு, வெற்றி முகம் காட்டி உள்ளதால், மாநில காங்கிரஸ் அலுவலகங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு திரண்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.