காங்கிரஸின் பணியை மக்களின் இதயங்களை விட்டு நீக்க முடியாது - சோனியாவுக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்
Recommended Video
சென்னை: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியா காந்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு ஆற்றியுள்ள சிறப்பான பணிகளை, மக்களின் இதயங்களை விட்டு நீக்க முடியாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் தோற்ற நிலையில், சோனியா காந்தி மீண்டும் தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 430 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக படுதோல்வியை அடைந்ததை காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களால் ஜீரணிக்க இயலவில்லை.
தேர்தல் முடிவுகளால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் ராகுலின் முடிவை ஏற்க காங்கிரஸ் செயற்குழு மறுத்து விட்டது. தங்களுக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை என வலியுறுத்தியது. நாடு முழுவதுமுள்ள அக்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், ராஜினாமா முடிவை ராகுல் திரும்ப பெற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிராம சபையில உட்கார்ந்து, டீ குடிச்சு, ஜீன்ஸ் போட்டு.. ஜிம்முக்கு போய்..ஸ்டாலின் மீது பாய்ந்த சீமான்
ஆனால் ராகுலோ தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்து வருவதாக கூறுப்படுகிறது. இச்சூழலில் தான் உடல்நிலை சரியில்லாததால் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி இருந்த ராகுலின் தாயான சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, கூட்டணி கட்சித் தலைவரான ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மரியாதைக்குரிய அன்னை திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பன்முகத்தன்மை, மதசார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏழை எளிய நடுத்தர விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை ஆகியவற்றிற்கு நிரந்தர உத்திரவாதமாகத் காங்கிரஸ் திகழுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
இத்தகைய காங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை, இந்திய மக்களின் நல்இதயங்களை விட்டு என்றும், எந்த சக்தியும் நீக்கி விட முடியாது என திட்டவட்டமாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.