முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.. திமுக போராட்டத்திற்கு காங்கிரஸும் ஆதரவு!
திமுக சார்பாக நாளை ஆளுநர் வீடு முன் நடத்தப்படும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
சென்னை: திமுக சார்பாக நாளை ஆளுநர் வீடு முன் நடத்தப்படும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
தமிழக அரசியல் கொடநாடு விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக இந்த விவகாரம் தொடர்பாக தினம் ஒரு குற்றச்சாட்டை வைத்து வருகிறது. கொடநாடு எஸ்டேட் கொள்ளைகள் மற்றும் மர்ம மரணங்களுக்கு பின் யார் இருக்கிறார், எதனால் இந்த மர்ம மரணங்கள் நடந்தது என்று நிறைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் உள்ளது.
சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். அதே நாளில் அவர் இது தொடர்பாக ஆவணப்படமும் வெளியிட்டார்.
இதில் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.
மேலும் ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக, தமிழக முதல்வரை பதவி விலக கோரி போராட்டம் நடத்த போவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி திமுக சார்பாக நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வீடு முன் போராட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக உறுப்பினர்கள், தொண்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். முதல்வர் பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பாக நாளை ஆளுநர் வீடு முன் நடத்தப்படும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.