ரஜினியுடன் அரசியலில் நாங்கள் மாறுபடுகிறோம்.. ஆனால்.. கே எஸ் அழகிரி
சென்னை: ரஜினிகாந்துடன் அரசியலில் இருந்து நாங்கள் மாறுபடுகிறோமே தவிர அவரது தகுதி, திறமை, பெருந்தன்மை ஆகியவற்றில் எந்த மாறுபாடும் கிடையாது. மத்திய அரசு அறிவித்த விருதுக்கு அவர் தகுதியானவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு எதிர்மறையாக செயல்படுவது மட்டுமே தெரிந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு இந்தியாவை புரட்டி போட்ட வழக்கு. ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டனர். அதில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டது மாபெரும் குற்றம். மன்னிக்க முடியாத குற்றமாகும்.
நிர்பயா பலாத்கார வழக்கு
இந்திய மற்றும் தமிழக பெண் சமுதாயம் மன்னிக்காது. நிர்பயா பலாத்கார வழக்கை விட பொள்ளாச்சி வழக்கு மிகவும் கொடூரமானது. முக்கிய தலைவர்களின் குடும்பம் இதில் சம்பந்தப்பட்டு உள்ளது. இதில் அரசு கவனக்குறைவாக நடந்தது தவறு.
ஆர்எஸ்எஸ்
புதிய கல்விக் கொள்கை தரம், தகுதி என்ற வார்த்தையை வைத்து நாட்டின் சமூக நீதியை சீரழிப்பதற்கும் தொழிலாளிகளின் பிள்ளைகள் படிப்பதை வடிகட்ட செய்கின்ற செயல். இந்த தகுதி, திறமை என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் ஆரம்ப கொள்கை.
கல்வி
வெளியில் இருந்து பார்த்தால் தகுதி, திறமையும் இருந்தால் தவறா என்று கேள்வி வரும். ஒரு கூலி தொழிலாளியின் பிள்ளைக்கு 5, 8, 10,11,12 ஆகிய வகுப்புகளில் பொது தேர்வு நடத்திவிட்டு நீட் என்ற தேர்வை வைத்திருந்தால் மீண்டும் குலத் தொழிலைதான் செய்ய முடியும். கல்வியே பயில முடியாது.
போராடிய கல்வி
காமராஜர், தந்தை பெரியார் போராடிய கல்வி, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கிற செயலாகும். ஆர்.எஸ்.எஸ். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அண்ணா, எம்.ஜி.ஆர்., பெயரை சொல்லும் அதிமுக கொடிய காரியத்தை செய்ய கூடாது. செய்தால் எங்கள் உயிரை கொடுத்தாவது தடுப்போம்.
ஜிஎஸ்டி வேறு
நீட் தேர்வை காங்கிரஸ் - திமுக கொண்டு வந்ததாக கூறும் அமைச்சர் ஜெயக்குமார் அதை நீக்கிவிட்டு போக வேண்டியது தானே. திமுக-காங்கிரஸ் கொண்டு வந்த எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வீர்களா. ஜி.எஸ்.டி. திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது வேறு. ஆனால் தற்போது வந்துள்ள ஜி.எஸ்.டி. வேறு.
மருத்துவமனைகள்
அமைச்சர் ஜெயக்குமார் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும். திமுக-காங்கிரஸ் கொண்டு வந்தது வேறு, நடைமுறைப்படுத்தியது வேறு. டாக்டர்கள் போராட்டம் நடத்தினாலும் மருத்துவமனைகளை செயல்பட வைத்தனர்.
துணை முதல்வர்
எந்த கோரிக்கை நியாயமோ அதை செய்ய வேண்டுமே தவிர மிரட்ட கூடாது. ஜனநாயகத்தில் போராடுகின்ற உரிமை உள்ளது. அதை ஒடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வெளிநாட்டு பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
கவுரவம்
ரஜினிகாந்த் அவருக்கு வழங்கும் விருதிற்கு தகுதியானவர். அவருக்கு எந்த விருது வந்தாலும் தமிழக காங்கிரஸ் வரவேற்கும். ரஜினியுடன் அரசியல் ரீதியாக சில விஷயங்களில் மாறுபடுகிறமோ தவிர அவருடைய திறமை, தகுதி, பெருந்தன்மை ஆகியவற்றில் மாறுபாடு கிடையாது. அரசு கவுரவித்தால் வரவேற்க கூடிய ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.