தென் சென்னை அல்லது கோவை.. குஷ்புவுக்காக முயற்சித்த காங்கிரஸ்.. நடுவில் வந்து நின்ற சிபிஎம்!
-கோயா
சென்னை: திமுக கூட்டணியில் யார் யாருக்கு சீட் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக மாறி வருகிறது. நடிகை குஷ்புவுக்காக சீட் கேட்டு காங்கிரஸில் இரு தொகுதிகளை முயற்சித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் திமுகவிடமிருந்த நெகட்டிவான பதில் வந்துள்ளதாம்.
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை வாங்கியுள்ள காங்கிரஸ் தற்போது அந்தத் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விஷயத்தில் மும்முரமாகியுள்ளது. முக்கியமாக, தனக்கு சாதகமான மற்றும் தனக்கு வேண்டியவர்களுக்கான தொகுதிகளைப் பெறுவதில் காங்கிரஸ் ஆர்வமாக உள்ளதாம்.
அந்த வகையில் நடிகை குஷ்புவுக்கு முக்கிய தொகுதியைப் பெற முயற்சிகள் நடந்ததாம். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளதாக சொல்கிறார்கள்.
இரண்டில் ஒன்று
குஷ்புவை மனதில் கொண்டு கோவை அல்லது தென் சென்னை ஆகிய தொகுதிகளை திமுகவிடம் காங்கிரஸ் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டையும் திமுக நிராகரித்து விட்டதாக சொல்கிறார்கள்.
மார்க்சிஸ்டுகள்
கோவை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறதாம். அது தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி என்பதால் அந்தத் தொகுதியை சிபிஎம் வலியுறுத்திக் கேட்கிறதாம். அனேகமாக அது சிபிஎம்முக்கே போகும் என்று தெரிகிறது.
திமுகவுக்கு தென் சென்னை
தென் சென்னை தொகுதி என்பது திமுகவின் பாரம்பரியமான தொகுதி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் நின்று வென்ற தொகுதி. காங்கிரஸும் கூட இங்கு பாரம்பரியமாக வெற்றிகளைப் பெற்ற தொகுதிதான். ஆனால் தற்போது திமுக விட்டுக் கொடுக்க விரும்பவில்லையாம். எனவே இதுவும் கிடைக்காத நிலை உள்ளதாம்.
ராஜ்யசபாவுக்குப் போக வாய்ப்பு
குஷ்புவுக்கு சாதகமான தொகுதி திமுகவிடமிருந்து கிடைக்காமல் போகும்பட்சத்தில் அவரை ராஜ்யசபா எம்.பியாக்கும் திட்டம் காங்கிரஸ் மேலிடத்திற்கு உள்ளதாம். சிறப்பான முறையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வாதம் செய்யக் கூடிய திறமை படைத்தவர் என்பதால் குஷ்புவை நாடாளுமன்றத்தில் பயன்படுத்திக் கொள்வதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளதாக சொல்கிறார்கள்.