வைகோ தொடங்கி வைத்தார்.. ஸ்டாலின் வரை வந்து நிற்கிறது.. திமுக - காங். சண்டைக்கு பின்னணி இதுதானா?
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பிளவிற்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பிளவிற்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை புகைந்து கொண்டு இருந்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் வட மாநிலங்கள் எதிலும் பெரிதாக வெற்றிபெறவில்லை. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமாக தோல்வியை தழுவியது. தமிழகத்தில் மட்டும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.
இந்த தேர்தல் தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திமுக விலகி செல்வதாக பேச்சுகள் அடிப்பட்டு வந்தது. இதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது.
மனித தவறு.. 176 பேர் பலி.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவிற்கு லட்டு போல கிடைத்த காரணம்.. என்ன ஆகுமோ!?
கூட்டணி தர்மம்
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் சண்டை வெளிப்படையாக வெளியே தெரிகிறது. இந்த சண்டைக்கு கூட்டணி தர்மம்தான் காரணம் என்று காங்கிரஸ் கூறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.
ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் திமுக எங்களுக்கு அப்படி எதுவும் செய்யவில்லை. எங்களிடம் தருவதாக வாக்களித்த இடங்களை கூட திமுக எங்களுக்கு வழங்கவில்லை.
தலைவர் பதவி
27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகூட வழங்கவில்லை. மாவட்ட அளவில் பேசிமுடித்த எந்த ஒரு ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி குறிப்பிட்டு இருந்தார்.
சிதம்பரம் என்ன
அதேபோல் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் இதைத்தான் குறிப்பிட்டு இருந்தார். நாங்கள் திமுகவை மிரட்டவில்லை. நாங்கள் நியாயமாகத்தான் பேசுகிறோம். எங்களுக்கு இடம் கேட்க உரிமை இருக்கிறது. அதை வெளிப்படையாக கேட்டு இருக்கிறோம் என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு காரணம்
ஆனால் இந்த பிரச்சனை வெறும் கூட்டணி தர்மத்திற்காக மட்டும் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள். முதற்கட்டமாக லோக்சபாவில் தற்போதெல்லாம் காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து செயல்படுவது கிடையாது. பெரிதாக அவர்கள் பேசிக்கொள்வது கூட கிடையாது.
கருத்து வேறுபாடு
அவையிலேயே இவர்களுக்கு இடையில் நிறைய கருத்து வேறுபாடு நிகழ்ந்து இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருப்பவர் வைகோ என்றும் கூறுகிறார்கள். கடந்த சில மாதம் காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ பேசியது பெரிய சர்ச்சையானது. பாஜக மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியும் மக்களை ஏமாற்றியது.
வைகோ சண்டை
காஷ்மீர் பிரச்சனையில் பாஜகவை மட்டுமல்ல, காங்கிரசையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று வைகோ குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருவரும் விமர்சனம் செய்துள்ளனர்.
திமுக வேடிக்கை
இதற்கு மீண்டும் வைகோ பதில் அளிக்க அது பெரிய சண்டையாக மாறியது. இதுதான் திமுக கூட்டணியில் முதலில் ஏற்பட்ட பிளவு ஆகும். இதை திமுக சமாதானம் செய்யாமல் வேடிக்கை பார்த்தது. இப்போது வரை மதிமுக - காங்கிரஸ் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்ன கோபம்
ஸ்டாலின் மதிமுகவை கண்டிப்பார் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் ஸ்டாலின் இதை குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது காங்கிரசை கோபத்திற்கு உள்ளாக்கியது. திமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக காங்கிரஸ் இப்போது ஸ்டாலினை எதிர்க்க தொடங்கி உள்ளது. இதற்கு உள்ளாட்சி தேர்தலை ஒரு காரணமாக சொல்கிறது என்கிறார்கள்.
ஸ்டாலின் வரை
அப்போது வைகோவிடம் தொடங்கிய பிரச்சனைதான் இப்போது ஸ்டாலின் வரை வந்துள்ளது. இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கும். கூட்டணியில் வேறு சில கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக அதிர்ச்சியில் இருக்கிறது. அவையும் இனி குரல் கொடுக்கும், என்று கூறுகிறார்கள்.
என்ன மிரட்டல்
அதே சமயம் இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் இந்த சண்டைக்கு பின் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்தான் காரணம். மேயர் இடங்களை பெறுவதற்காக காங்கிரஸ் இப்படி வலை விரிக்கிறது, இது மறைமுக மிரட்டல் என்றும் கூறுகிறார்கள். இதற்கு இன்னும் ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக ஸ்டாலின் அல்லது துரைமுருகன் பதில் அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.