மொத்தமாக சொதப்பிய பிளான்.. கே.எஸ் அழகிரி போட்ட யார்க்கரில் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. காங். ஷாக்!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவிற்கு எதிராக வெளியிட்ட அறிக்கை, காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவிற்கு எதிராக வெளியிட்ட அறிக்கை, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மாபெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட சண்டை வெளிப்படையாக வெளியே தெரிகிறது. இந்த சண்டைக்கு கூட்டணி தர்மம்தான் காரணம் என்று காங்கிரஸ் கூறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.
ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் திமுக எங்களுக்கு அப்படி எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு திமுக கட்சி மிகவும் கடுமையாக எதிர்வினையாட தொடங்கி உள்ளது .
திமுகவுடன் சமாதானமாக செல்லுங்கள்.. சண்டை வேண்டாம்.. தமிழக காங்கிரசிடம் பொங்கிய சோனியா!
காரணம்
காங்கிரஸ் கட்சியின் இந்த சண்டைக்கு பின் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்தான் காரணம் என்று கூறுகிறார்கள். இந்த தேர்தலில் மேயர் இடங்களை பெறுவதற்காக காங்கிரஸ் இப்படி வலை விரிக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை.
தூது
இதனால் தற்போது நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கு காங்கிரஸ் இப்படி திட்டமிட்டுள்ளது. திமுகவிற்கு தூது விட வேண்டும் என்பதற்காக கே.எஸ் அழகிரி இப்படி பேசி உள்ளார். இது மறைமுக மிரட்டல் என்றும் கூறுகிறார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிருப்தியை வெளிப்படுத்தினால்தான், மேயர் தேர்தலில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று காங்கிரஸ் நினைத்தது.
பிரச்சனை
ஆனால் இது தற்போது காங்கிரஸ் கட்சிக்கே பிரச்சனையாக முடிந்துள்ளது. கே.எஸ் அழகிரி பேட்டியை பார்த்து திமுக நிறைய இடங்கள் ஒதுக்கும் என்றுதான் காங்கிரஸ் நினைத்தது. ஆனால் இதற்கு திமுக வேறுவிதமாக பதில் வினையாற்றியுள்ளது. இதற்கு இன்னும் ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.
கோபம் ஏன்?
கூட்டணி உடைவதற்காக முதல் சிக்னல் இது. காங்கிரஸ் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஸ்டாலின் டொக் வைப்பார் என்று நினைத்து கே.எஸ் அழகிரி யார்க்கர் பந்து போட்டார். ஆனால் அதில் ஸ்டாலின் சிக்ஸர் அடித்து தமிழக காங்கிரசை கலங்க வைத்துள்ளார். இதனால் கே .எஸ் அழகிரி அவசர அவசரமாக சமாதான அறிக்கை வெளியிட்டார்.
ஸ்டாலின் இல்லை
ஆனால் அதையும் ஸ்டாலின் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் உடன் இன்னும் ஸ்டாலின் கோபத்தில்தான் இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவை தவிர பெரிய கூட்டணி வாய்ப்புகள் கிடையாது. இதனால்தான் தமிழக காங்கிரஸ் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் பெரிய குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளது.