அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்...! ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வரும் போது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முகுல்வாஸ்னிக், சஞ்சய் தத் உள்ளிட்ட மேலிடப் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், காங்கிரசுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்தைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது போல், நாமும் மாவட்டத் தலைநகரங்களில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என மாவட்ட நிர்வாகி ஒருவர் குரல் கொடுக்க, அது குறித்து மேடையில் இருந்த தலைவர்கள் பேசி உடனடியாக முடிவெடுத்தனர். அதன் படி மத்திய அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அடுத்த வாரம் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அமித்ஷாவுக்கு எதிர்ப்பு
மேலும், அமித்ஷா அடுத்தது எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் அவருக்கு பலத்தை எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்காக நிர்வாகிகளும், தொண்டர்களும் தயார்நிலையில் இருக்க வேண்டும் எனவும் முகுல் வாஸ்னிக் கேட்டுக்கொண்டார். இதைக்கேட்ட நிர்வாகிகள், சும்மாவே குடைவார்கள், இதில் உள்தூறை அமைச்சருக்கு எதிராக போராடி வம்பில் மாட்டிவிடாமல் இவர் விடமாட்டார் போல எனப் பேசிக்கொண்டனர்.
பிரியாணி விருந்து
சத்தியமூர்த்திபவனில் எப்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றாலும், கூச்சல் குழப்பம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் சோர்வான நிலையிலேயே காணப்பட்டனர். மேலும், ராயப்பேட்டையில் ஆர்டர் செய்து சத்யமூர்த்தி பவனுக்கு பிரியாணியை கொண்டு வந்துவிட்டார் கே.எஸ்.அழகிரி. கூட்டம் முடிந்த பின்னர் நடைபெற்ற பிரியாணி விருந்தில் நிர்வாகிகளுடன் அவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்.