தேர்தலில் காங்கிரஸ் வென்று, நான் தோற்றிருந்தால் கூட மகிழ்ச்சியடைந்திருப்பேன்.. திருமா பேச்சு
சென்னை: மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால் தான், பாஜக-விடம் தோல்வியடையும் நிலை உருவானதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணி சார்பாக சிதம்பரம் மக்களவை தொகுதியில் களமிறங்கிய திருமாவளவன், கடும் இழுபறிக்கு பின் சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது ஆனால் தேசியளவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் கிடைத்த வெற்றியை பெரிதாக கொண்டாட இயலவில்லை.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திருமாவளவன், மதவாத கட்சிகள் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பது என்பது வேதனைப்பட வேண்டிய விஷயம் என்றும் குறிப்பிட்டார். சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதில் தமக்கு துளியளவும் மகிழ்ச்சியில்லை. இதனை தாம் உண்மையாக சொல்வதாகவும், ஒப்புக்காக சொல்லவில்லை என்றும் கூறினார்.
மக்களால் தேர்வு செய்யப்படாமல் மத்திய அமைச்சர் ஆனவர்களின் பட்டியல் இதோ...
மத்தியில் யார் ஆட்சிக்கு வர கூடாது என எதிர் கட்சிகளாகிய நாம் கணக்கு போட்டு காய் நகர்த்தினோமோ, அந்த மதவாத சக்தியே மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பது என்னை வேதனையடைய செய்துள்ளது.
கடந்த 5 வருடங்களாக நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குளாக்கிய சக்திகள் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளார்கள் என்பதை ஏற்கமுடியவில்லை என்றார். இதுவே தற்போது தமக்கு பெரும் கவலையாக உருவெடுத்துள்ளதாக திருமாவளவன் கூறினார்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்ற செய்தி கிடைத்ததும், சிதம்பரம் தொகுதியில் தாம் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி வரவில்லை என்று கூறினார். ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்து, தாம் சிதம்பரம் தொகுதியில் தோற்றிருந்தால் கூட இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன் என்றார் திருமா.
தனித்துவத்தை காப்பாற்றுவதற்காகவே தனிச்சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார். தமிழகத்தை பொறுத்த வரை எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை நம்மால் வெல்ல முடிந்தது என்றார். இது போல நாடு முழுவதும் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜக கூட்டணி கட்சிகளை எதிர்த்திருக்க வேண்டும்.
அப்படி எதிர்த்திருந்தால் நிச்சயம் பாஜக-வால் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. பல மாநிலங்களில் எதிர்கட்சிகள் சிதறி நின்றதால் தான் பாஜக வெற்றி பெற்று விட்டது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால், ஜனநாயக விரோத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என பேசியுள்ளார் திருமாவளவன்.
சென்னையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய முஸ்லீம் லிக் கட்சி தலைவர் ஜவஹாருல்லா மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, உணவு அருந்தி நோன்பு திறந்து வைத்தனர்.