அண்ணாநகரில் எலைட் டாஸ்மாக் சரக்கு வேண்டுமா?.. இந்த விளம்பரத்தை நம்பாதீர்கள்.. மோசடி கும்பலின் சதி
சென்னை: சென்னையில் எலைட் டாஸ்மாக்கில் உள்ள சரக்குகள் வீட்டுக்கே கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்துவிட்டதாக போலீஸில் புகார் அளித்து வருகிறார்கள்.
Recommended Video
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்டிக் கடைகள் முதல் நகைக்கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதில் டாஸ்மாக்கிற்கு விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சமூக விலகல் கேள்விக்குறியாகும் என்பதால் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மது கிடைக்காத விரக்தியில் ஷேவிங் லோஷன், சானிடைஸர் உள்ளிட்டவற்றை குடித்துவிட்டு 4 முதல் 5 பேர் வரை இறந்தனர்.
சுவர் ஓட்டை
எனினும் அரசு டாஸ்மாக் கடைகளை திறக்கவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு கடையின் சுவற்றை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் வருகிறது. அதில் "அண்ணாநகரில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் உள்ள சரக்குகள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். 7064278160 மற்றும் 9983670439 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஆனால் விலை எம்ஆர்பி விலையை விட கூடவே இருக்கும்" என்பதுதான் அந்த விளம்பரம்.
மது விற்பனை
அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு இத்தனை நாட்கள் மது கிடைக்காமல் கவலையில் இருந்தவர்கள் குஷியால் 50-க்கும் மேற்பட்டோர் அதில் ஆர்டர் கொடுக்க போன் செய்துள்ளனர். மறுமுனையில் பேசும் நபர் ஒரு கூகுள் பே கணக்கிற்கான எண்ணை கொடுத்து 100 ரூ மட்டும் முன்பணமாக செலுத்த சொல்கிறார். இது போல் செலுத்தி முடித்ததும் அந்த மோசடி நபர்கள் இந்த எண்ணை பிளாக் செய்து விடுகிறார்கள்.
பண இழப்பு
சரி சரக்கு வரவில்லையே என வேறு எண்ணிற்கு கால் செய்தாலும் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படுகிறது. இப்படியே ரூ 500 முதல் ரூ 2500 வரை ஏராளமானோர் இழந்துவிட்டனர். அண்ணா நகரை சேர்ந்த ஒருவர் தனது பிறந்தநாளுக்கு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க அந்த நபருக்கு போன் செய்துள்ளார். இந்தியில் பேசிய நபர் இன்னும் கையிருப்பில் கொஞ்சம் பாட்டில்களே உள்ளதால் ஒரு பாட்டில் 1500 என்றும் அதில் பாதி பணத்தை கூகுள் பே -வில் செலுத்துங்கள் என்றும் கூறினாராம்.
பணம்
இதை நம்பி 750 ரூபாயை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அண்ணாநகரில் உள்ள சம்பந்தப்பட்ட கடையை அணுகினால் நாங்கள் இதுபோன்ற புகார்களை பெற்றுள்ளோம். இதை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தனர். மதுவும் கிடைக்காமல் பணத்தை ஏமாந்த நபர்கள் காவல்துறைக்கு படையெடுத்து வருகிறார்கள்.