புனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!
சென்னை: புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளன.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 16-ந் தேதி முதல் போடப்படுகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மகாராஷ்டிராவின் புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கின. 8 விமானங்கள் மூலம் இந்த கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
முதலாவது விமானம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த இந்த தடுப்பூசிகள், பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல் சென்னைக்கும் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மொத்தம் 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. இவை 10 கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்தும் 20,000 கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்து சேரும் என தெரிவித்திருந்தார்.