ஆள் வர்றாங்க.. அப்பறமா பேசறேன்.. 2 மணி நேரம் கழித்து.. ஏன் இப்படி செய்தார் செந்தில்குமார்?
இறால் பண்ணை நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
சென்னை: 'ஆள் வர்றாங்க.. அப்பறம் பேசறேன்..' இதுதாங்க அவர் என்கிட்ட பேசின கடைசி வார்த்தை.. அப்பறம் 2 மணி நேரத்துலயே ஆபீஸ் ரூம்லேயே தூக்கு போட்டுக்கிட்டார்ன்னு சொல்றாங்க.." என்று கணவன் பேசியதை கூறி கதறி அழுகிறார் சித்ரா.. இந்த மர்ம மரணம் தொடர்பாக இவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளனர்.
பாலவாக்கத்தைச் சேர்ந்த தம்பதி செந்தில்குமார் - சித்ரா. 35 வயதான செந்தில்குமார், அடையாறில், தனியார் இறால் இறக்குமதி ஆபீசில் அக்கவுண்டன்ட்-ஆக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.
இந்நிலையில், இவர்களது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெயிடு நடத்தி உள்ளனர். அப்போது சில ஆவணங்கள், கம்ப்யூட்டர் டிஸ்க்குகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது செந்தில்குமாரிடமும் விசாரணை நடந்துள்ளது. இதற்காக ஆபீஸிலேயே 3 நாட்களாக செந்தில்குமார் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. பிறகு திடீரென ஆபீஸ் ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, 28-ம் தேதி காலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த செந்தில்குமார் களைப்பாக இருந்திருக்கிறார்.. ஆபீஸில் டென்ஷன் என்று மனைவியிடம் சொல்லியவர், திரும்பவும் வேலைக்கு கிளம்பி போயுள்ளதாக தெரிகிறது. கணவர் ஆபீசில் இருந்த சமயம், சித்ராவுக்கு ஒரு போன் வந்துள்ளது.
"செந்தில்குமாருக்கு உடம்பு சரியில்லை.. அடையாறு ஆஸ்பத்திரிக்கு வாங்க" என்று சொல்லி உள்ளனர். இதனால் சித்ரா பதறியடித்து கொண்டு ஓடினார்.. ஆனால் அதற்குள் செந்தில்குமார் இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர். இதனால் கணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அடையாறு ஸ்டேஷனில் புகார் தந்தார். இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.
தம்பதி இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். 3 நாளாக தொடர்ந்து ஆபீசில் வேலை பார்த்துவிட்டு, 4-வது நாள்தான் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்திருக்கிறார்.. ஆபீசில் டென்ஷன் என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்.. பிறகு திரும்பவும் வேலைக்கு போனவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்வது நம்பும்படியாக இல்லை என்கின்றனர் குடும்பத்தினர்.
செந்தில் வேலை பார்க்கும் அலுவலகத்தில் 3 நாட்களாக இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்துள்ளது. இதற்கு பிறகுதான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்வது நம்பும்படியாக இல்லை என்றும், செந்தில்குமார் கோழை இல்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செந்தில்குமார் இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்புகூட சித்ராவிடம் போனில் பேசியுள்ளார். "ஆள் வர்றாங்க.. அப்பறம் பேசறேன்.." இதுதான் கடைசியாக அவர் பேசி, போனை கட் செய்திருக்கிறார். அடையாறு ஸ்டேஷனில் சித்ரா புகார் தந்தும் நடவடிக்கை எதுவும் எடுப்பதாக தெரியவில்லை என்பதால், உறவினர்கள், கமிஷனர் ஆபீசில் திரும்பவும் புகார் தந்துள்ளனர். இப்போது விசாரணை தீவிரமாகி உள்ளது.. ஆனால் எதுவாக இருந்தாலும் போஸ்ட் ரிப்போர்ட் வந்தபிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும் என்கிறார்கள்.