முடங்கிய மக்கள்.. மாவட்டங்களில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருவதால், பல இடங்களில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன... முன்னெச்சரிக்கை செயல்பாடுகளிலும் முழு மூச்சாக இறங்கி உள்ளன.
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தென்தமிழகம் மற்றும் மேற்கு மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை
இயல்பு வாழ்க்கை
இதையடுத்து தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.. சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் விடாது மழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை ஓரிரு இடங்களில் முடங்கி உள்ளது.
நீர்மட்டம்
பெய்து வரும் மழை காரணமாக, தமிழகத்தின் முக்கிய அணைகளிலும் நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது.. கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 72 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது... காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.. அணையின் நீர்மட்டமும் 91 அடியாக உயர்ந்துள்ளது.
பள்ளிப்பட்டு
அதேபோல, ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப்பட்டு பகுதியின் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சொரக்காய்பேட்டை, நெடியம், சாமன்தவாடா ஆகிய பகுதிகளுக்கு இடையில் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்கள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர கிராமங்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மரங்கள்
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, பலத்த காற்று வீசி வருகிறது.. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன.. கரண்ட் கம்பங்கள் சேதம் அடைந்ததால், பெரும்பாலான பகுதிகளில் நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாததால், ஊட்டி தீயணைப்பு வீரர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் மின்வாள் கொண்டு மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர்.
ஊட்டி
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மரங்களை அகற்றும் பணி நடந்தது... ஊட்டி அருகே இத்தலார் பகுதியில் மழையால் பாதிக்கப்படுபவர்கள் தங்க தற்காலிகமாக நிவாரண முகாம்கள் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன... இதைதவிர, பல இடங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், அவர்களும் நிவாரண முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.