தந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த்?. விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்!
Recommended Video
சென்னை: தந்தை பெரியாருக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவிப்பதாக கூறி பெரியார் இயக்கங்கள் போராட்டங்களை நடத்துவது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளாக உள்ளன.
சென்னையில் அண்மையில் துக்ளக் பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர்- சீதை உருவங்கள் ஆடை இல்லாமல் எடுத்துவரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டன என குறிப்பிட்டிருந்தார்.
இது மிகப் பெரும் சர்ச்சையானது. 1971-ல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தின் மீது எதிர்ப்பாளர்களால் செருப்பு வீசப்பட்டது; அந்த செருப்பை எடுத்து ஒரு தொண்டர் ராமர் படம் மீது அடித்தார்; இதைத்தான் பெரியார், ராமரை செருப்பால் அடித்தார்; ராமரை செருப்பால் அடித்த திமுகவுக்கா ஓட்டு? என துக்ளக் எழுதியது என திராவிடர் இயக்கத்தினர் விளக்கம் அளித்தனர். ஆனாலும் ராமர் படத்தை பெரியார் தொண்டர் செருப்பால் அடித்த செயலை ஏற்க முடியாது.
கொளத்தூர் மணி வார்னிங்
இத்துடன் பிரச்சனை ஓய்ந்துவிடவில்லை. தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி எச்சரித்தார். அதேபோல் கோவை ராமகிருட்டிணனை பொதுச்செயலாளராக கொண்ட தந்தை பெரியார் தி.க.வினர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தனர்.
ரஜினிகாந்த் மீது புகார்
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீது தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் அடுக்கடுக்காக ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் ரஜினிகாந்த் மவுனம் தொடருவதால் ஜனவரி 22, 23-ல் அவரது சென்னை போயஸ் கார்டன் வீடு முற்றுகையிடப்படும் என்று திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் தி.க. அறிவித்துள்ளன.
|
பாபா பாடல் சர்ச்சை
திராவிடர் விடுதலைக் கழகம் தமது ட்விட்டர் பதிவுகளில் 2002-ல் பாபா படத்தில் 'பெரியார் ராஜாஜியாகிறார்' என பெரியாரை இழிவுபடுத்தும் பாடல் இடம்பெற்ற போதும் இதேபோல் போராட்டத்தை அறிவித்ததை நினைவுகூர்ந்துள்ளது.
பாபா படத்தில், "கடவுளை மறுத்தவன் நாள்தோறும் கூறினானே நாத்தீகம்! திருமகன் வருகிறான் திருநீறை நெற்றிமீது தினம் பூசி அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி!" இதுதான் பாபா படத்தில் கவிஞர் வாலி எழுதிய வரி.
ரஜினிக்கு எதிர்ப்பு
அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் பெரியார் இயக்கங்கள் ஒன்றாக செயல்பட்டன. இப்பாடல் வரிகள் வார ஏடு ஒன்றில் வெளியானதை தொடர்ந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. சென்னை நகரம் முழுவதும் ரஜினிகாந்துக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
போராட்ட அறிவிப்புகள்
இப்பாடல் வரிகளை பாபா படத்தில் இருந்து நீக்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் தி.க. அறிவித்தது. திராவிடர் கழகமும் அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட தீவிரம் காட்டியது.
பாபா பாடல் வரி நீக்கம்
இதன் பின்னர் ஹைதராபாத்தில் இருந்த ரஜினிகாந்துடன் பேசிய கவிஞர் வாலி, பாடல் வரிகளை நீக்கிவிடலாம் என முடிவுக்கு வந்தார். இப்பாடல் வரிகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் போராட்டமும் கைவிடப்பட்டது.
|
முன்னரும் பேச்சு
இதேபோல் திமுக ஆட்சிக் காலத்தில் (1996-2001) பெரியார் கொள்கைகள் இனி தமிழ்நாட்டில் தேவை இல்லை என்று ரஜினிகாந்த் பேசினார். அப்போது ரஜினிகாந்துக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டங்களை நடத்தியிருந்தனர். இதையும் திராவிடர் விடுதலை கழகத்தினர் நினைவுகூர்ந்து தமது ட்விட்டர் பதிவுகளில் பதிவிட்டுள்ளனர்.
மீண்டும் போராட்டம்
இந்நிலையில்தான் மீண்டும் பெரியார் தொடர்பாக ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. இம்முறையும் பெரியார் இயக்கங்கள் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.