எஸ்.பி.ஐ. தேர்வுகளில் முன்னேறிய ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு கட் ஆஃப் மார்க்கால் சர்ச்சை!
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) எழுத்தர் பணிக்கான தேர்வுகளில் முன்னேறிய ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு கட் ஆஃப் மார்க் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
எஸ்.பி.ஐ. எழுத்தர் பணிக்கான தேர்வுகள் அண்மையில் நடைபெற்றன. இதற்கான முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. இந்த முடிவுகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இத்தேர்வு முடிவுகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மார்க்குகள்தான் இந்த பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான கட் ஆஃப் மார்க்- 61.25
பழங்குடியினருக்கான கட் ஆஃப் மார்க்- 53.75
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மார்க்- 61.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை பெறுவோருக்கான கட் ஆஃப் மார்க் வெறும் 28.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10% இடஒதுக்கீட்டை பெறுவோருக்கான கட் ஆஃப் மார்க் மற்ற வகுப்பினரை விட மிக மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.