கல்வி டிவி சிஇஓ ஆக ஆர்எஸ்எஸ் அபிமானி மணிகண்ட பூபதி.. கிளம்பிய சர்ச்சை.. முதல்வருக்கு பரபர கடிதம்!
சென்னை : கல்வி தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் இலவச தொலைக்காட்சி சேனல் 'கல்வி'. இந்த தொலைக்காட்சியின் மூலம், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இந்த சேனலுக்கு சி.இ.ஓ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கல்வி டிவியின் தலைமைப் பொறுப்பில் ஆர் எஸ் எஸ் அபிமானியை நியமித்தது யார்? தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா? என மூத்த ஊடகவியலாளர் திருஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 நாள் லீவு முடிஞ்சி போச்சு.. சொந்த ஊரில் இருந்து படையெடுக்கும் மக்கள்.. சென்னையில் செம டிராபிக்
கல்வி தொலைக்காட்சி
கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில், 2019 ஆகஸ்ட் மாதத்தில் கல்வி தொலைக்காட்சி தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதில் அவரவர்களுக்கு உரிய பாடதிட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
சி.இ.ஓ பணி
கல்வி தொலைக்காட்சியை பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகளே நிர்வகித்து வந்த நிலையில், கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்து, அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் மிக்க ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சி.இ.ஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மே 28 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மணிகண்ட பூபதி
அதைத் தொடர்ந்து, இந்தப் பணிக்கு வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்காணல் நடத்தப்பட்டு இந்தப் பொறுப்புக்கு தீவிர ஆர்.எஸ்.எஸ் அபிமானியாக அறியப்படும் சாணக்யா யூடியூப் சேனலின் இணை நிறுவனரான மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருஞானம்
இந்த நியமன்ம் தொடர்பாக தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களின் ஆசிரியரும், பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சியின் முன்னாள் சேனல் ஹெட்டுமான திருஞானம், தமிழக முதல்வருக்கு ஒரு திறந்த மடலை அனுப்பியுள்ளார். அவரது கடிதத்தில், "மதப்பிரிவினைவாத கோட்பாட்டாளர் மணிகண்ட பூபதி என்பவர், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் CEO-வாக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம் இதுதானா?
'தன்னம்பிக்கையை விதைக்கும் ஆக்கப்பூர்வ ஊடகவியலாளர்' என்று டாக்டர் அப்துல்கலாமால் பாராட்டப்பட்ட நான் கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ பொறுப்புக்கு விண்ணப்பத்திருந்தபோதும், என்னை நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்ததன் காரணம் இதுதானா? முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டு காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் உலகத் தரமான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டு காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?
அறிவார்கள்
தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடையே அறிவியல் பார்வையையும் தன்னம்பிக்கையையும் விதைப்பதில் மவுனமான பெரும் பங்களிப்பை நான் செய்திருப்பதை தலைமைச் செயலரும், முதல்வரின் முதன்மைச் செயலாளரும் நன்கறிவார்கள். பிரபல தொலைக்காட்சிகளில் எனது 'சந்திப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சியும், 'நம்பிக்கை' நிகழ்ச்சியும் மாணவர்களின் உயர்கல்வி - வாழ்க்கைப்பணி தேர்வுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் என்பதை முன்னணி ஊடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள்.
நாக்பூரில் எடுக்கப்படும் முடிவா?
சமத்துவம், சமூக நீதி தத்துவங்களில் புடம்போடப்பட்ட என்னை திட்டமிட்டு தவிர்த்து விட்டு, கோமிய கோட்பாட்டாளரை கல்வி டிவி-யின் தலைமைப் பொறுப்பில் நியமித்தது யார்? தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா? மீண்டும் அடிமைப்படவா பெற்றோம் சுதந்திரம்? இதற்காகவா தமிழ்நாட்டின் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்கள் இரவுபகலாக உழைத்தோம்? 'திராவிட மாடல் அரசு' என்ற கம்பீரமான தமிழரசு ஓராண்டு சாதனை மலரில், "நான் முதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்த நாள் தமிழ்நாட்டின் பொன்னாள்" என்று எத்தனை நம்பிக்கையோடு எழுதினேன். அதற்குள் எத்தனை மாற்றங்கள்.. வெட்கம் தான் மிஞ்சுகிறது.
வேறு யாரையாவது நியமியுங்கள்
கல்வி தொலைக் காட்சியில் சி.இ.ஓ பொறுப்பு வேண்டும் என்ற சுயநலத்தில் நான் இதனை எழுதவில்லை. குறைந்தபட்ச அறிவியல் நோக்கும், சமூக அக்கறையும் கொண்ட வேறு யாரையாவது அங்கு நியமியுங்கள். இளைய தலைமுறையின் மனங்களில் நச்சு விதையைத் தூவும் கோமியக் கோட்பாட்டாளர்கள் அங்கு வேண்டவே வேண்டாம்" என அவர் தெரிவித்துள்ளார்.