செங்கோட்டையனுக்கு ஆதரவாக காரைக்குடியில் போஸ்டர்.. அடடே ஆச்சரியமா இருக்கே!
பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: "பொதுச்செயலாளர் எடப்பாடியார்" என்ற போஸ்டர் சர்ச்சையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்லை. அதற்குள் "பொதுச்செயலாளர் செங்கோட்டையன்" என்ற அடுத்த போஸ்டர் நம்மை கிறுகிறுக்க வைத்துள்ளது.
எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. ஆட்சியை பிடித்து முதல்வரான பிறகும்கூட கட்சி தலைமை என்ற அந்த பதவியை யாருக்குமே விட்டுக்கொடுக்கவில்லை.
சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார். இப்படிப்பட்ட ஆளுமை நிறைந்தவரிடம் இருந்த அந்த முக்கிய பதவியைதான் ஆளாளுக்கு ஏலம் போட ஆரம்பித்துள்ளார்கள்.
"பொதுச்செயலாளர்" எடப்பாடியாரே வருக.. அதிமுகவில் வெடித்து கிளம்பியது அடுத்த போஸ்டர் சர்ச்சை!
அதிமுக தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. ஆனால் கூட்டம் தொடங்கும் முன்னமேயே, அலுவலகம் எதிரே "பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக" என்று போஸ்டர் ஒட்டி தெறிக்க விட்டனர்.
இதேபோல, "பொதுச்செயலாளர் செங்கோட்டையன்" என்ற போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது மேலும் மண்டையை காய வைத்துள்ளது. காரைக்குடியில்தான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக செங்கோட்டையன் வர வேண்டும் என காரைக்குடி அதிமுகவினர் விருப்பப்படுகிறார்கள் என்பதால் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த கணக்குப்படி பார்த்தால், ஒவ்வொரு மாவட்ட அதிமுகவினரும், தங்கள் தொகுதி முக்கிய புள்ளிகளுக்காக இப்படி போஸ்டர் அடித்து ஒட்டிக் கொண்டிருந்தால், யார்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பெரிய கேள்வி நமக்கு எழுந்துள்ளது!