மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு
சென்னை: மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்பட்ட புகாரின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 18-ம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில், காந்தி குறித்து சர்ச்சையாக பேசியதாக திருமாவளவன் மீது இந்து மக்கள் முன்னணி அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி அமைப்பாளரான நாராயணன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் மே 18 நடந்த இலங்கையிலுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்வில பேசிய திருமாவளவன், கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு ஆதரவாக சில கருத்துகளை முன் வைத்து பேசினார்.
தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட ரவுடி வல்லரசு.. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன?
மேலும் ஒரு படி மேலே போய் கோட்சேவை இந்து தீவிரவாதி அல்ல பயங்கரவாதி என்று சொல்லிவிட்டு, அதற்காக ஆங்கிலத்தில் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார். கோட்சே குறித்து பேசியதோடு நில்லாமல், காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி. அவரை கொலை செய்த கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என தாக்கி பேசியுள்ளார்.
தேசப்பிதா என போற்றப்படும் மகாத்மா காந்தியை இந்து தீவிரவாதி என்று கூறி, இந்துக்கள் தான் நாட்டின் பயங்கரவாதிகள் என்பது போல சித்தரித்துள்ளார்
மேலும் கோட்சே குறித்து கமல் பேசியதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் முன்ஜாமீன் கோரியிருந்த போது, காந்தி அல்லது கோட்சே குறித்து தலைவர்கள் யாரும் விவாதிக்கவோ, பேசவோ கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மீறி தான் திருமாவளவன் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து விமர்சிக்கும் திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த புகார் மனுவின் அடிப்படையில், காந்தி மற்றும் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக, திருமாவளவன் மீது சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில், 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.