டிடிவி ஹேப்பி..! ஊரக உள்ளாட்சித் தேர்தலில்.. அமமுக-வுக்கு மீண்டும் குக்கர்.. இம்முறை விசிலடிக்குமா?
சென்னை: விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் - வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் செப்.15ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களில் மட்டும் 13,542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்
அமமுக குக்கர் சின்னம்
ஒவ்வொரு தேர்தலிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையமே சின்னங்களை ஒதுக்கீடு செய்யும். குக்கர் சின்னம் கோரி அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததிருந்தார். இந்த நிலையில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குக் குக்கர் சின்னத்தை மாநிவ தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
கடந்த காலங்கள்
முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி, அதிமுகவின் மதுசூதனனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அவருக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் 21 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அமமுக-க்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
2021 தேர்தல்
குக்கர் சின்னம் கேட்டுத் தேர்தல் ஆணையத்திடமும் அமமுக விண்ணப்பித்திருந்தது. ஆனால் அவர்களுக்குப் பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. அதேநேரம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அமமுக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
சாதிப்பாரா டிடிவி
குறைந்தபட்சம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் தோல்வி அடைந்தார். இதனிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் குறைந்தபட்ச வெற்றியையாவது பெற வேண்டிய கட்டாயத்தில் டிடிவி உள்ளார். இல்லையென்றால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகும் சுமார் மூன்று ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற வேண்டிய பல பணிகள் முடங்கிப்போனது. அதேபோல மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பிய பல கோடி நிதியும் திரும்பி அனுப்பப்பட்டன. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டித்ததைத் தொடர்ந்து கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகள் மற்றும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட அந்த 9 மாவட்டங்களில் விரைவாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.