மழை வெள்ளத்தில் முதியவர்களை தோளில் சுமந்து மீட்ட காவலர்கள்... பாராட்டி நெகிழ்ந்த முதல்வர்
நிவர் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சிக்கிய முதியவரை போலீஸார் தோளில் சுமந்து மீட்பது நெகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: நிவர் புயல் தாக்கத்தினால் சென்னையிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித்தவித்து வருகின்றனர். மீட்புப்படையினர் துரிதமாக மீட்டு வருகின்றனர். காவல்துறையினர் சிலர் முதியவர்களை தங்களின் தோளில் சுமந்து மீட்டு வருகின்றனர். காவல்துறையினரின் இந்த பணியை பாராட்டியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெகிழ்ச்சி அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மெல்ல மெல்ல கரையை நெருங்கி வருகிறது. மரக்காணம் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் உருவானதில் இருந்தே சென்னையில் கனமழை பெய்துவருகிறது. கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முட்டி அளவுக்கு தண்ணீரால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறுகளாக வெள்ளநீர் சாலைகளில் ஓடி வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிவருக்கு நடுவே.. காரை எடுத்துக்கொண்டு.. சாரை சாரையாக பாலங்களுக்கு போன சென்னை மக்கள்.. என்னாச்சு?
வெள்ள நீர் அதிகமாகி வருவதால் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் காவல்துறையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் வயதானவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நடக்க முடியாத முதியவரை காவலர் ஒருவர் தனது தோளில் சுமந்து மீட்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள சென்னை காவல்துறை நிர்வாகம் மற்றும் காவலர்களுக்கு எனது உளம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். #Nivarpuyal என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.