குவைத்துக்கு அவசரமாக போனை போட்ட ராமதாஸ்.. ரமேஷ் வைத்த பரபர கோரிக்கை.. !
குவைத்தில் இந்தியர்களை மீட்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்
சென்னை: கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக என்றெல்லாம் சிறிதும் பார்க்காமல் அடுத்தடுத்த அதிரடிகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் டாக்டர் ராமதாசும் டாக்டர் அன்புமணியும்! டாஸ்மாக் திறக்கக்கூடாது என்பது முதல், விழுப்புரம் ஜெயஸ்ரீ விவகாரம், குவைத் தமிழர்களின் நலன் வரை அனைத்து தரப்பினருக்கும் குரல் கொடுத்து வருகின்றனர். கூட்டணி தர்மம் என்பதையும் தாண்டி பாமக, மக்களின் நலன்களில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதை பல தரப்பினரும் வரவேற்று வருகின்றனர்.
கொரோனாவைரஸ் தமிழகத்தில் நுழைவதற்கு முன்பிருந்தே எச்சரிக்கை ட்வீட், அறிக்கைகளை கொடுத்து மக்களை அலர்ட் செய்தவர்கள் பாமக நிறுவனர் ராமதாசும், எம்பி அன்புமணியும்!! அரசுக்கு பல உத்திகளையும், ஆலோசனைகளையும் கூட சொல்லியபடி வந்தனர்.
இந்த சமயத்தில்தான் மதுக்கடைகளை திறக்க போவதாக ஒரு பேச்சு எழுந்தது.. அப்போது முதல் ஆளாக வந்து ட்வீட் போட்டது டாக்டர் ஐயாதான்.. "மூடியது மூடியதாகவே இருக்கட்டும், தயவு செய்து திறக்க வேண்டாம்" என்றார்.. எனினும் டாஸ்மாக் திறக்கப்பட்டது.. இதற்கு அன்புமணி ராமதாஸ், "அரசு எடுத்த முட்டாள்தனமான முடிவு" என்று பகிரங்கமாகவே அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
ஆயிரம் முன்பகை இருந்தாலும்.. அதற்காக உயிருடன் சிறுமியை கொளுத்துவதா.. ராமதாஸ் ஆவேசம்
ராமதாஸ்
அதில், "''வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்களில் அதிகபட்சமாக 3375 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400 தமிழர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் உரிய மருத்துவம் வழங்கப்படவில்லை..
சிகிச்சை
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அவருடன் ஒரே அறையில் இருந்த மேலும் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் படவில்லை. மாறாக, அடிப்படை வசதிகள் கூட இல்லாத முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறிய அறைகளில் 20க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒரே கழிப்பறையை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டியிருப்பதால், அவர்களில் எவருக்கேனும் கொரோனா இருந்தால் மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.
இந்தியர்கள்
இந்நிலையில், அடுத்தடுத்த ட்வீட்களையும் பதிவிட்டு உள்ளார். "குவைத் பொதுமன்னிப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு வழங்கப்படும் உணவு ஒத்துக் கொள்ளாததால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தாக்குதல் அச்சமும் அதிகரித்திருக்கிறது. அவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர வேண்டும்!"
குவைத்
"குவைத் நாட்டில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரமேஷ் என்பவர் மூலமாக அங்குள்ள தமிழர்களிடம் பேசினேன். அங்கு வேலை இழந்து வாடும் தொழிலாளர்கள் தமிழகம் திரும்பினாலும் வாழ்வாதாரமின்றி வாட வேண்டியிருக்கும்; தங்களுக்கு அரசின் உதவிகள் வேண்டும் என்று கூறினார்கள்"... "அவர்கள் கூறுவது உண்மை தான். வேலை இழப்பால், இதுவரை ஈட்டிய பணத்தையும் செலவழித்து விட்டு, வெறுங்கையுடன் திரும்பும் அவர்களின் உடனடித் தேவைகளுக்காக நிவாரண உதவிகளையும், அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காக வேலைவாய்ப்பு/தொழில் முதலீட்டு உதவிகளையும் அரசு வழங்க வேண்டும்!"
நிதியுதவி
"NLC விபத்தில் காயமடைந்த பாவாடை, பாலமுருகன் ஆகிய மேலும் இரு தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டனர் என்பதையறிந்து வேதனை அடைந்தேன். இதுவரை 4 உயிர்களை இழந்திருக்கிறோம். இனியாவது தொழிலாளர்களின் உயிருக்கு NLC பாதுகாப்பு வழங்க வேண்டும்; குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக பல ட்விட்களை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்களை பெரும்பாலானவர்கள் ஆதரித்து வருகின்றனர்.
கமெண்ட்கள்
அதேசமயம், "உண்மைதான் ஐயா... பலர் வீதிகளில் உறங்கிவருகிறார்கள்... உணவு கிடைக்காமல்.... விரைவில் இவர்களை அழைத்துக்கொள்ள இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ் தற்போது கூட்டணி தர்மத்தையும் தாண்டி மக்கள் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்துவதும், அவர்களின் நலன் சார்ந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதும் அனைத்து தரப்பினராலும் பெரிதும் கவனிக்கப்பட்டும், ஈர்க்கப்பட்டும் வருகின்றன.