இதுவா பணக்கார நோய்.. இல்லவே இல்லை.. எல்லாரும் ஏழைகளே.. பொய், ஏமாற்று அரசியல்.. திமுக எம்பி வேதனை
முதல்வருக்கு மறைமுகமாக எம்பி செந்தில்குமார் பதிலடி தந்திருக்கிறார்
சென்னை: "இது ஒன்றும் பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் அல்ல. சிந்தித்து பாருங்கள்.. இதே போல் தான் தமிழகத்தில் 1,683 பேருக்கு கரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் ஏழைகளே.. பொய் மற்றும் ஏமாற்று அரசியல்!" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்பி செந்தில்குமார் மறைமுகமாக பதிலடி தந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கொரோனாவைரஸ் பரவல் தடுப்பு குறித்து முதல்வர் பேசும்போது, "ஏங்க.. இதெல்லாம் பணக்காரர்களுக்கு வந்த நோய்தான்.
ஏழைங்களுக்கு எங்கே வந்தது? அவங்கதான் கொண்டு வந்து விட்டுட்டாங்க.. வெளிநாட்டில் இருந்து, வெளிமாநிலத்தில இருந்து கொண்டு இறக்குமதி ஆன நோய்தானே.. ஏழைகளுக்கு நோயே கிடையாது.
இறக்குமதி
ஏழைகள் கிட்ட தாராளமா பேசலாம்.. பணக்காரங்கள கண்டால்தான் பயமா இருக்குது.. ஏன்னா, வெளிநாடுகளுக்கு போய்ட்டு வந்து நோயை இறக்குமதி பண்ணிட்டு இருக்காங்க.. அதேமாதிரி வெளிமாநிலத்துக்கும் பலபேர் போய்ட்டு வந்து, இங்க அந்த நோய் ஏற்பட்டிருக்கு.. இதனாலதான் நோய் வந்திருக்கே தவிர தமிழகத்தில் இந்த நோய் உருவாகலையே" என்றார்.. முதல்வரின் இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்டது.. விவாதிக்கப்பட்டது.
சீன வைரஸ்
முதல்வர் சொல்கிறபடி பணக்காரர்கள்தான் கொண்டு வந்து இறக்குமதி செய்தார்களா என்றெல்லாம் அலசப்பட்டது. "இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களை எல்லாம் பணக்காரர்கள், அவர்களுக்கு எதுக்கு ஊக்கத்தொகை என்று முதல்வர் சொல்ல வருகிறாரா?" அல்லது இவ்வளவு தூரம் பேசும் முதல்வர், சீனாவில் இந்த வைரஸ் வந்த உடனேயே தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணக்காரர்களை முற்றிலும் ஏன் சோதனை செய்யவில்லை? ஏன் வெளிநாட்டவர் தமிழ்நாட்டில் கொரோனாவை இறக்குமதி செய்யும் முன்னே பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கவில்லை? ஏன் வெளிநாட்டவரை தனிமைப்படுத்தவில்லை? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
தூத்துக்குடி அம்மா
தூத்துக்குடியில் ஒரு வயதான அம்மா இறந்து போனாங்களே.. அவங்க பணக்காரங்களா.. எல்லா நாட்டுக்கும் நோய்கள் வெளிநாட்டிலிருந்து தான் வந்தது... உள்நாட்டில் உற்பத்தி ஆகவில்லை.. என்றும் பதில் கருத்துக்களை ட்விட்டர்வாசிகளும், நெட்டிசன்களும் கூறினர்.
தொற்று
இந்நிலையில், இதுவரை பொத்தி பொத்தி பாதுகாத்த தருமபுரி தொகுதிக்குள் நேற்றுமுன்தினம் கொரோனா புகுந்தது.. இதுகுறித்து திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் கருத்து சொல்லும்போது, "தருமபுரியில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. என் தொகுதியைச் சார்ந்த இவர் ஏழை. சிலர் சொன்னது போல் இது ஒன்றும் பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் அல்ல. சிந்தித்து பாருங்கள் இதே போல் தான் இன்று தமிழகத்தில் 1,683 பேருக்கு கரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் ஏழைகளே.. பொய் மற்றும் ஏமாற்று அரசியல்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக
இந்த கருத்துக்கு திமுகவினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. எனினும் ஒருசிலர் எம்பிக்கு அறிவுறுத்தியும் ட்வீட் போட்டுள்ளனர்.. "ஐயா இதில் அரசியல் செய்யாதீர், எதில் அரசியல் செய்ய வேண்டும் இதில் அரசியல் செய்ய வேண்டாம்... தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும்.. நீங்கள் படித்தவர்.. படிக்காத பாமர மக்கள் அல்ல.. இந்த விஷயத்தில் தயவுசெய்து அரசியல் செய்ய வேண்டாம் நீங்கள் இப்படி twt போட்டிருப்பது மிக வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.
அக்கறை
மேலும் சிலரோ, திமுக, அதிமுகவை தூக்கி தூர வைத்துவிட்டு, "தர்மபுரி மாவட்டத்தில் எந்த ஊரு நபர் அவர்? முன்னெச்சரிக்கைக்காக கேட்கிறேன் அண்ணா.... நான் இப்பொழுது பொம்மிடியில் உள்ளேன் என்றும், "சார், அவருக்கு எப்படி வந்தது என்ற சோர்ஸ் ஆராயப்பட்டதா.. இல்லையெனில், இது இன்னும் சில பரவலுக்கு வித்திடும்.." "அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும்" என்று பாதிப்படைந்தவர் குறித்து கவலையும், அக்கறையும் தெரிவித்து வருகின்றனர்.