"புளியை கரைக்கும்" புளியந்தோப்பு.. ஜெபக்கூட்டம், டெல்லி மாநாடு, ஜன நெரிசல்.. வேகம் எடுக்கும் கொரோனா!
சென்னை புளியந்தோப்பில் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது
சென்னை: இப்போதைக்கு சென்னையில் புளியந்தோப்பு பகுதிதான் கொரோனா அச்சத்தை அதிகமாக கூட்டி, மிரட்டி வருகிறது.. இதனால் தொற்று பாதிப்பை அதிகமாக்கிவிடாமல் தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாத கடைசியில் புளியந்தோப்பில் உள்ள சர்ச்சில் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது.. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 4 பேருக்குதான் முதன்முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்து கொண்டே போனது.. குறிப்பாக ஆசிர்வாதபுரம் பகுதியில் 40 பேருக்கு மேல் பாதிப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதேபோல டெல்லி மாநாட்டுக்கு புளியந்தோப்பு பகுதியில் இருந்துதான் அதிகம் பேர் போய் வந்தனர் என்ற தகவலும் வெளிவந்தது.. இதன் தாக்கமும் இப்போதுவரை குறையாமல் உள்ளது.. இதற்கு அடுத்த காரணம் புளியந்தோப்பு பகுதி ஒரு நெரிசலான இடம்.. உதாரணத்துக்கு 77-வது வார்ட்டில் மட்டும் 60 ஆயிரம் பேர் வசிக்கிறார்களாம்.
இந்த அளவுக்கு நெருக்கடியான இடம் என்றால், மக்கள் புழங்குவதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கவே செய்யும்.. லாரி தண்ணீர் வந்தால் எல்லோருமே முண்டியத்து கொண்டுதான் தண்ணீரை பிடிக்க வேண்டி இருக்கும்.. பாத்ரூம் வசதிகளும் தனித்தனியாக இல்லை.. அதனால் தொற்று ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளன.
ஒரு லட்சம் பேரில் 241 பேர் வரை தொற்று பரவல் கண்டறிப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இந்த வார்டில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 124 முதல் 242 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இந்த பகுதியை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மக்களே உஷார்.. விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்.. மாஸ்க் அணியால் பயணித்தால் ரூ.500 அபராதம்
எனினும் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் "மைக்ரோ ப்ளான்" செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று மொபைல் எக்ஸ்ரே, மற்றும் தெர்மல் ஸ்கிரினிங் போன்ற டெஸ்ட்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.. இப்போதைக்கு புளியந்தோப்புதான் அதிகாரிகளுக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது..