சபாஷ்..! தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உடனடியாக களத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி
சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி ஆணையரும் போலீஸ் கமிஷனரும் ஆய்வு செய்தனர்.
Recommended Video
தமிழ்நாட்டில்
கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கும் பின்னர் தளர்வுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. இப்போது கூடுதல் தளர்வுகளுடன் மாநிலத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை
முதல் அலையிலும் சரி, 2ஆம் அலையிலும் சரி மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஊராக இருந்தது தலைநகர் சென்னை தான். மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள ஊர் என்பதால் இங்கு வைரஸ் பாதிப்பு மிக மிக வேகமாகப் பரவியது. குறிப்பாக 2ஆம் அலை சமயத்தில் சென்னை தினசரி கொரோனா பாதிப்பு 3000ஐ கூட தாண்டியது. கொரோனா கட்டுக்குள் வைக்கச் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கவனித்து வந்தார். குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலையின் போது, நாடு முழுவதும் மருத்துவமனையில் படுக்கை வசதி பற்றாக்குறை நிலவியது. முறையான படுக்கை வசதி இல்லாத காரணத்தால் பல்வேறு பகுதிகளில் உயிரிழப்பு சம்பவங்கள் நிறைந்தன.
கார் ஆம்புலன்ஸ்
ஆனால், மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில் படுக்கை வசதி பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. ககன்தீப் சிங் பேடியின் யோசனையின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு கார்களில் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்குப் பிரதமர் மோடியே பாராட்டு தெரிவித்திருந்தார். அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் சென்னை சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் நேற்று மாலை ஆணையர் ககன் தீப் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தேனாம்பேட்டை, சென்னை சென்டரல் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அங்குப் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு மாஸ்க் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ககன் திங் பேடி, "தற்போது 80% மக்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்தே செல்கின்றனர். மாஸ்க் அணிவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மாஸ்க் முக்கியம்
பொது இடங்களில் முகக் கவசத்தைக் கட்டாயமாக அணிய வேண்டும். இல்லையெனில் கடும் அபராதம் விதிக்கப்படும். இதற்காகத் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக நாளை மாபெரும் தடுப்பூசி முகாமை நடத்தவுள்ளோம். இதை வெற்றி பெற செய்ய போலீசாருடன் இணைந்து செயல்படுவோம். கிட்டத்தட்ட 1200 இடங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த உள்ளோம்.
கொரோனா தடுப்பூசி
கோவாக்சின் தடுப்பூசி கடும் பற்றாக்குறை நிலவி வந்தது. தற்போதைக்கு, இரண்டாம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு எங்களிடம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருப்பு உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் கோவாக்சின் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளலாம். இரண்டாம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேபோல் முதல் டோஸ் செலுத்திக் கொள்ள வருபவர்களுக்கு கோவிஷீல்டு வழங்கப்படும்.
எப்படிப் பரவுகிறது
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா வருவதில்லை. அப்படி வந்தாலும் லேசான கொரோனா பாதிப்பு தான் ஏற்படுகிறது. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்லாமல் சுற்றியிருப்பவர்களின் நலன் கருதியும் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும். இன்று நடைபெற உள்ள மாபெரும் தடுப்பூசி முகாமில் சென்னையில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேலானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம். பாசிட்டிவ் கேஸ்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் பயணம் செய்வோர் மூலமாகவும் அதிகம் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல், மாஸ்க் அணியாமல் இருப்பதாலும் வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. மத வழிபாட்டுத் தலங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. கரோனா வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.