தமிழ்நாட்டில் குழந்தைகளை விடாமல் துரத்தும் கொரோனா.. வேக்சினும் இல்லாத நிலை.. ஷாக் தரும் தரவுகள்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை குறைந்துள்ள போதிலும், சிறார்களுக்கு ஏற்படும் வைரஸ் பாதிப்பு என்பது இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்படத் தொடங்கியது. அப்போது தேர்தல் பிரசாரங்களும் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது முக்கிய தலைவர்கள் பலரும்கூட பொது இடங்களில் மாஸ்க்கூட அணியாமல் பிரசாரம் செய்தனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
கொரோனா ஊரடங்கு
அதிலும் கடந்த மே மாதம் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேலாகக் கூட சென்றது. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினசரி வைரஸ் பாதிப்பு
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரே மாநிலத்தில் ஏற்படும் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. 30 ஆயிரத்திற்கும் மேல் இருந்த வைரஸ் பாதிப்பு இப்போது 1800க்கு கீழ் குறைந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள போதிலும், சிறார்கள் மத்தியிலும் ஏற்படும் கொரோனா பாதிப்பு என்பது இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
சிறார்கள்
கொரோனா முதல் அலை சமயத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மட்டும் 7826 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அது 2019 ஆகஸ்ட் மாதம் 7485ஆகவும், செப்டம்பர் மாதம் 4022ஆகவும் குறைந்தது. அப்படியே குறைந்த பாதிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 885ஆக குறைந்தது. சிறார்கள் மத்தியில் உறுதி செய்யப்பட்ட வைரஸ் பாதிப்புகளில் இது தான் குறைவு.
உச்சம் தொட்ட பாதிப்பு
அதன் பின்னர் மாநிலத்தில் 2ஆம் அலை ஏற்பட்ட போதும், சிறார்கள் மத்தியிலான வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 1272 சிறார்கள் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஏப்ரல் மாதம் 9,586 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இது மே மாதம் 33,243 ஆக உச்சம் தொட்டது. அதேபோல கடந்த ஜூன் மாதம் 14,538 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5% சிறார்கள்
தினசரி கொரோனா உறுதி செய்யப்படுபவர்களில் 5% பேர் சிறார்களாக இருந்தனர். இப்போது ஜூலை மாதம் இதுவரை சுமார் 3400 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது. சிறார்கள் மத்தியில் ஏற்படும் தினசரி பாதிப்பு குறைந்ததைப் போலத் தோன்றினாலும், 2ஆம் அலை உச்சத்தில் இருந்த போது எப்படி ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பில் சிறார்களுக்கான பாதிப்பு 5% இருந்ததோ, அதேபோல இப்போதும் அது தொடர்கிறது.
தீவிர ஆலோசனை
அதாவது சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் ஆபத்து இன்னும் முழுமையாக குறையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்தியாவில் சிறார்களுக்கு செலுத்த இதுவரை எந்தவொரு வேக்சினுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, சிறார்கள் மத்தியில் வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் கொரோனா 3ஆம் அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படும் நிலையில், இது கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக உருவெடுத்துள்ளது. இதனால் வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனைக்குப் பின்னரே, பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.