கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்.. இடிக்கப்பட்டது வேலூர் - ஆந்திர எல்லையில் கட்டப்பட்ட கொரோனா சுவர்!
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக-ஆந்திர எல்லையின் குறுக்கே தடுப்புச்சுவர் எழுப்பி இருமாநில போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால், காய்கறி சப்ளை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த சுவர் இடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதி ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளது. குடியாத்தத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பலமநேர் செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் சைனகுண்டா சோதனைச் சாவடி உள்ளது.
இந்த சாலை மார்க்கமாக, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து குடியாத்தம் வழியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், சிமெண்டு, கிரானைட் கற்கள் உள்பட பல்வேறு முக்கியமான பொருட்கள் கனரக வாகனங்கள் மூலமாக வந்து செல்கின்றன.
மே 3ம் தேதிக்கு பிறகும் நீடிக்குமா ஊரடங்கு.. பிரதமர் நடத்திய வீடியோ கான்பரன்ஸ்.. முதல்வர் பங்கேற்பு
கண்காணிப்பு
கொரோனாவையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சைனகுண்டா சோதனைச் சாவடியில் வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறையினரும், மருத்துவக் குழுவினரும் இணைந்து 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறிகள், பால், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றி வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வாகனச் சோதனைக்குப் பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது.
ஆந்திராவில் நோய் தொற்று
இந்த நிலையில், பலமநேர் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால், அந்த மாவட்டத்தில் ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பு சுவர்
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து புது யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சைனகுண்டா சோதனைச் சாவடியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநிலம் செல்லும் சாலையும், பங்காருபாளையம் செல்லும் சாலையும் இணையும் முன்பே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
3 அடி உயரம்
பொன்னை, சைனகுண்டா ஆகிய 2 தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடி சாலைகள் இன்று முழுவதுமாக மூடும் வகையில் சாலை நீளத்திற்கு 3 அடி உயரம் வரை சுவர் எழுப்பி சாலைகள் மூடப்பட்டுள்ளது. 2 சோதனைச்சாவடிகள் மூடப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் வருகை பாதிக்காத வகையில் ஆந்திராவில் இருந்து பொன்னை வழியாக வரும் வாகனங்கள் கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாகவும், சைனகுண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.
இடிக்கப்பட்டது
இதனால், காய்கறி சப்ளை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக அங்கு பால் வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு பால் வியாபாரிகள், மக்கள் இதனால் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த சுவர் இடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அந்த பகுதிக்கு வந்து சுவரை இடிக்கும்படி உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மேற்பார்வையில் சுவர் இடிக்கப்பட்டது.