மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.. தமிழக சுகாதாரத்துறை
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற 267 மாணவ மாணவியரில், 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது.
மொத்தம் 405 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது, அவற்றின் விவரம் பின்வருமாறு: தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உள்ள 3032 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. இதேபோல் பிஎடிஸ் படிப்பை பொறுத்தவரையில், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில்(பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ். இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது.
முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்ட தரவரிசையின் படி 267 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதன் படி கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவப் படிப்புகளுக்கான 2ஆம் நாள் கலந்தாய்வு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்து வருகிறது.