கொரோனா வேகமாக பரவுகிறது... சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் - முதல்வர் பழனிச்சாமி
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கான அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக பொறுப்போடும் அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் அரசு ஊழியர்களும் தகுதிவாய்ந்த பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்ட வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கொரோனா பரவலை தடுக்க பொறுப்புடனும் சமூக அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,600 பேரை கடந்துள்ளது. 41955 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பேருந்தில் பயணிக்கவும், திரையரங்குகள், மால்களுக்கு வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி
மக்களுக்கு தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசால் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஆர்டி பிசிஆர் பரிசோதனை
ஆலோசனைக்குப் பிறகு பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி 300, 400 என தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பல ஆயிரக்கணக்காக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அதிக அளவில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது.
தடுப்பூசி கையிருப்பில் உள்ளது
கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் நிறைய பேரை சந்திக்கின்றனர். 2 வாரத்திற்குள் அனைத்து அரசு ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தகுதிவாய்ந்த பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
சமூக அக்கறை
கொரோனா பரவலை தடுக்க அனைவரும் சமூக பொறுப்புடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளவேண்டும். நம்முடைய வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அனைவருக்குமே அது சிரமம்தான். எனவே வீட்டை விட்டு வெளியே சென்றாலே முக கவசம் அணிந்து கொண்டு செல்வது அவசியம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
அலட்சியம் வேண்டாம்
பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். இறைச்சிக்கடைகள், சந்தைகளில் பொதுமக்கள் அதிகம் கூட வேண்டாம். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியில் கிளம்பும் போதும் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும் போதும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.