கல்லூரி திறப்பதே முடிவு செய்யவில்லை கல்விக் கட்டணம் வசூலிப்பது எப்படி - ஹைகோர்டில் அரசு பதில்
தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட் டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
சென்னை: கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் இதுவரை முடிவெடுக்காத நிலையில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை என ஹைகோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட் டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த பின்னணியில், இந்த வழக்கில், தமிழக உயர் கல்வித் துறை சார்பில், இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில், கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படவில்லை எனவும் தேர்வுகளை எப்போது நடத்துவது என இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் இதுவரை முடிவெடுக்காத நிலையில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை எனவும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
லாக்டவுன் காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பெற்றோரால் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து இருப்பு நிதி வைக்கப்படுவது உண்டு எனவும் ஆசிரியர்களுக்கு அந்த இருப்பு நிதியை பயன்படுத்தி ஊதியம் வழங்கலாம் என்றும் அதனால் கல்லூரி நிர்வாகங்களில் நிதியில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரர் சங்கம், தனியார் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், நிலுவை கட்டணங்களை பெற்றோருக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் கோரி கடந்த ஜூன் 30ஆம் தேதி அரசுக்கு மனு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவை பரிசீலித்த அரசு, தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட் டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.