பழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்!
சென்னை: தனக்கு உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என கொரோனா நோயாளி ஒருவர் குஷ்புக்கு ட்வீட் அனுப்பியுள்ளார்.
நடிகை குஷ்பு ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். இந்த ட்விட்டர் வாயிலாக திமுகவில் இருந்த போது சரி, காங்கிரஸில் இணைந்தபோதும் சரி, பாஜகவில் இணைந்த போதும் சரி அவர் தனது எதிர் கருத்துகளை ட்விட்டரில் முன் வைத்து வந்தார்.
தற்போது பாஜகவில் இணைந்தவுடன் ட்விட்டரில் படுவேகமாக செயல்படுகிறார். அது போல் பிரச்சாரங்களிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு முறை கடலூரில் வேல் யாத்திரை நடத்த குஷ்பு சென்னையிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மதுராந்தகம் அருகே அவரது கார் மீது கன்டெய்னர் லாரி ஒன்று பலமாக மோதியது. இதில் குஷ்பு காயமின்றி உயிர் தப்பினார். அப்போது முருகன் அருளால்தான் தான் உயிர் பிழைத்தேன் என குஷ்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குஷ்புக்கு ஒருவர் ட்வீட் அனுப்பியுள்ளார். அதில் எனக்கு கொரோனா சோதனை செய்ததில் உறுதியாகியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறேன். பழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம் என கூறியதோடு , குட் நைட் மேடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குஷ்பு விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். எப்போதும் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு குஷ்பு உதவி செய்வது குறிப்பிடத்தக்கது.