கொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் தங்கமணி.. நேற்று முதல்வருடன் சந்திப்பு!
சென்னை: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மின்விசை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கி இருந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் தரணிதரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இருவரும் சென்னையில் உள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் வாழ்த்தியுள்ளார்.
முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னை, மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஶ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ .பழனி மற்றும் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி
கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள்:
திமுகவில் இருந்து ஜெ. அன்பழகன், சேப்பாக்கம் எம்.எல்.ஏ. (இறந்துவிட்டார்), ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கும், இவரது குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. செய்யூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆகியோருக்கும், அதிமுகவில் பாலக்கோடு எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான கே.பி.அன்பழகன், பரமக்குடி எம்.எல்.ஏ, சதன் பிரபாகர், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ, குமரகுரு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ,பழனி, கோவை தெற்கு எம்.எல்.ஏ, அம்மன் அர்ஜுனன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.