காவல் உதவி ஆணையருக்கு கொரோனா... கலக்கத்தில் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள்
சென்னை: சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸ் காற்றை விட வேகமாக பரவிவருவதால் நாளுக்கு நாள் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களை இந்த நோய் அண்மையில் அதிகம் தாக்கி வருகிறது. மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், வரிசையில் இப்போது காவல்துறையினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை பூக்கடை பகுதி காவல் உதவி ஆணையருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவருக்கு யார் மூலமாக நோய்தொற்று ஏற்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. பல இடங்களுக்கும் ரோந்து சென்றதால் யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்பதை இன்னும் சரியாக கண்டறியமுடியவில்லை.
இதனிடையே கொரோனா பாதிப்புக்கு ஆளான பூக்கடை காவல் உதவி ஆணையர் நலமுடனும், உடல் சமநிலையுடனும் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்துகளும், ஆகாரங்களும் வழங்கப்படுவதாக கூறினர். கடந்த ஒரு வாரமாக சென்னையை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் அச்சத்திற்கும், கலக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.