3 மாதங்களில் கொரோனா 2வது அலை சுழற்றி வீசும்.. மருத்துவ குழு பரபர வார்னிங்! அப்போ பள்ளி, கல்லூரிகள்?
சென்னை: தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் கொரோனா 2வது அலை வீசக்கூடும் என்று மருத்துவ நிபுணர் குழு வார்னிங் கொடுத்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், இன்று, மருத்துவ நிபுணர் குழு, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தது. இந்த ஆலோசனையின்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம், மருத்துவ குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:
நிலைமை மோசம்.. சென்னையில் லாக்டவுனை தீவிரமாக்குங்கள்.. முதல்வருக்கு மருத்துவ குழு அதிரடி பரிந்துரை
உச்சநிலை
எந்த நோய் தொற்றும் ஒரு உயரத்துக்கு போய்ட்டு அப்புறம் குறைய ஆரம்பிக்கும். நாம் இப்போது, உச்ச நிலையில் இருக்கிறோம். நோய்த் தொற்று குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அதிகப்படியாக பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். சீனாவில் 2வது அலை வீசுவதை போல, தமிழகத்தில், இன்னும் 3 மாதங்கள் கழித்து மறுபடியும், கொரோனா அலை உருவாகக் கூடும்.
தயார் நிலை
தமிழகம் முழுக்க 75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 12,500 மருத்துவர்கள் மற்றும் பரிசோதனைக்கூட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 2000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். மனிதவளம் அதிகரிக்கப்பட்டால் தான் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். அந்த விஷயத்தில் அரசு சரியான பாதையில் செல்கிறது.
சென்னையில் ஊரடங்கு தளர்வை கடினமாக்க வேண்டும்
சென்னைக்கு ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்கி கட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தோம். அரசு அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்து அதை முடிவெடுக்க உள்ளது. அரசு மட்டுமே நடவடிக்கை எடுப்பதால் குறையக் கூடிய விஷயம் கிடையாது. முக கவசம் அணிவது, எச்சில் துப்பாமல் இருப்பது, கூட்டம் சேராமல் இருப்பது போன்றவற்றை எல்லாம் தனி மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை தானே தவிர, அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கை கிடையாது.
மக்களின் பழக்கம்
யாரிடமாவது பேசும்போது முக கவசத்தை கீழே இறக்கி விட்டு பேசுவது போன்றவை நம் மக்களிடம் உள்ள பழக்கமாக இருக்கிறது. இது போன்ற பழக்கங்களை மாற்றிக் கொள்ளாத வரை, நோய் தொற்று பாதிப்பு குறையப் போவது கிடையாது. நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளோருக்கும் எவ்வாறு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்தால்தான், கொரோனா பிரச்சனையை குறைக்க முடியும்.
அறிகுறி இருந்தாலே பரிசோதனை செய்யுங்கள்
மக்களிடம் கொரோனா பற்றிய அச்சம் இருக்கிறதே தவிர, அது பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய மாட்டேன் என்கிறார்கள். இது தமிழகத்தில், ஒரு வித்தியாசமான சூழ்நிலையாக இருக்கிறது. தொண்டை வலி, உடம்பு வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கூட உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஒருநாள், உடல்வலி காய்ச்சல் இருந்துவிட்டு குணமாகி இருந்தால் கூட அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே பரிசோதனை செய்வது அவசியம். இவ்வாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள்
3 மாதங்கள் பிறகு சீனாவை போல 2வது அலை வீசக் கூடும் என மருத்துவர் குழு கூறுவதால், பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்பது பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. இந்த வருடம் முடிவடையும்வரை, கல்விக் கூடங்கள் மூடப்பட்டுதான் இருக்குமோ என்ற ஐயப்பாட்டை, இந்த பேட்டி எழுப்பியுள்ளது.