சென்னையில் யூடர்ன் அடித்த கொரோனா கேஸ்கள்.. 7 டாஸ்மாக் கடைகள் மூடல்.. விவரம் இதோ!
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மார்க்கெட் பகுதிகளில் செயல்பட்டு வந்த 7 மதுக்கடைகள் மூடப்பட்டன.
Recommended Video
சென்னையில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொருத்தமட்டில் கடந்த சில வாரங்களாக மக்கள் அதிகமாக கடைகளுக்கு சென்றதால்தான் கொரோனா கேஸ்கள் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுமணத் தம்பதி
ஆடி மாதத்தில் அவரவர் குடும்ப வழக்கப்படி புதுமணத் தம்பதிகளுக்கு சீர் செய்வது வழக்கம். அந்த சீர் வரிசையில் அவரவர் வசதிற்கேற்ப தங்கமும் துணிமணியும் வாங்குவது வழக்கம். அந்த வகையில் தங்கம், துணிக் கடைகளில் மக்கள் குவிந்தனர். அது போல் சீர்வரிசை பொருட்களான மஞ்சள், குங்குமம், பழக் கடைகள், தேங்காய் கடைகளிலும் மக்கள் கூட்டம் ஓயவில்லை.
ஆடி போனா ஆவணி
அது மட்டுமல்லாமல் ஆடி முடிந்தவுடன் ஆவணியில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்காக திருமண ஜவுளிகள், நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. இந்த கூட்டத்தில் பலர் மாஸ்க் அணியவில்லை என தெரிகிறது.
கொரோனா கேஸ்கள் அதிகரிப்பு
இதனால் கொரோனா கேஸ்கள் அதிகரித்ததால் சென்னையில் மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகளை 10 நாட்களுக்கு மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன் தினம் முதல் தி நகர் ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், புரசைவாக்கம் கடை வீதி, கொத்தவால்சாவடி மார்க்கெட், என் எஸ் சி போஸ் ரோடு, அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்ட கடைகள் மூடப்பட்டன.
தற்காலிக மூடல்
மேலும் அந்த பகுதிகளில் செயல்பட்ட டாஸ்மாக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. பாரிமுனையில் உள்ள மிண்ட் தெரு, திருவல்லிக்கேணி பாரதிசாலை, அமைந்தகரை, செனாய்நகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்ட 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அது போல் மேற்கு தாம்பரத்தில் செயல்பட்டு வந்த 3 மதுக்கடைகளும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
7 மதுபான கடைகள் மூடல்
மக்கள் அதிகமாக கூடக் கூடிய இந்த பகுதிகளில் செயல்பட்ட 7 மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கடைகளில் விற்க இருந்த மதுபானங்கள் அருகில் இருந்த கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த கடையை ஈ போல் குடிகாரர்கள் மொய்த்தனர். இந்த கொரோனாவை தடுக்க அரசு எடுத்த திடீர் நடவடிக்கையால் சென்னையில் உள்ள 40 எலைட் டாஸ்மாக் கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.