இருவருக்கு கொரோனா அறிகுறி.. சென்னை பல்லாவரம் அருகே சாலைக்கு சீல் வைப்பு
சென்னை: டெல்லியில் நடந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர் உள்பட இருவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து குரோம்பேட்டையில் உள்ள ஹஸ்தினாபுரத்தில் ஒரு சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450ஐ தாண்டியது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தோர் ஆவர்.
வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு வந்தாலோ, டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு வந்தாலோ இல்லை மேற்கண்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த காலத்தில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னை பல்லாவரம் பேரூராட்சிக்குள்பட்ட ஹஸ்தினாபுரத்தில் வடக்கு மசூதி தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவர் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு வந்தவர் என கூறப்படுகிறது.
அது போல் இன்னொருவருக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து மசூதி தெரு உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள தெருக்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.