சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை அந்த பல்கலைக்கழகத்தின் டீன் இனியன் உறுதி செய்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குறைந்து கொண்டே வந்தது. சென்னையில் தினமும் 1000-த்திற்கு மேல் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வெறும் 300 அல்லது 400 கணக்கில் உள்ளது.

இந்த நிலையில் திடீரென சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியது. நேற்று வரை அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் விடுதியில் தங்கியிருந்ததாகவும் அனைவரும் ஆராய்ச்சி மாணவர்களாவர்.
இவர்கள் கல்லூரி வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும் மாஸ்க் போடாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதை அண்ணா பல்கலைக்கழக டீன் இனியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications