கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள் - வசதிகளை ஆய்வு செய்த முதல்வர்
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை: கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களை சிகிச்சைக்கு அழைத்து வருவதற்காக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் ஆம்புலன்ஸ்க்குள் ஏறி செயல்பாட்டை ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் பெரிதும் உதவியாக உள்ளன.
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 406 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது.
இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.. திடீரென அடுத்தடுத்து லாக்டவுன் தளர்வு.. இதுதான் காரணமோ?
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதன்படி தமிழகம் முழுவதும் தற்போது 1,005 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த சேவையை விரிவுபடுத்த 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்பாட்டிற்கு வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 118 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதில் தமிழக அரசு சார்பில் 20.65 கோடி ரூபாய் மதிப்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 1.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 வாகனங்களும், 3.09 கோடி மதிப்பில் 10 ரத்த தான ஊர்திகளும் பயன்பாட்டிற்காக துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவற்றில் பிஎல்எஸ் எனப்படும் அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள் மற்றும் ஏஎல்எஸ் எனப்படும் மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளும் செயல்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அவசரகால ஆம்புலன்ஸ்களில் செயற்கை சுவாச கருவி, ஆக்ஸிஜன் அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவி போன்ற உயர்தர கருவிகளுடன் 60 மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கையாள அவசரகால மேலாண்மை தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஊர்திகள் இன்று முதல் செயல்பட இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட உள்ளதாகவும், சில தினங்களில் மீதமுள்ள அவசர ஊர்திகளும் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் மொத்தம் 1005 ,108 அவசர ஊர்திகள் இயங்கி வருகிறது .இதில் 65 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்களும் 871 அடிப்படை அவசரகால ஆம்புலன்ஸ் மற்றும் மலையோரப் பகுதிகளுக்கான ஆம்புலன்ஸ்களும் 65 மேம்பட்ட அவசர கால ஆம்புலன்ஸ்களும், 41 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.