கட்டுப்பாடு தளர்வு- தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் திறப்பு
சென்னை: தமிழகத்தில் 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் உடற்பயிற்சி கூடங்கள், 15 மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க 4 மாதங்களுக்கு முன்னர் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுன் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து அனைத்து இடங்களிலும் இன்று காலை உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டன.
தமிழக அரசு ஏற்கனவே உடற்பயிற்சி கூடங்களில் 1 மணிநேரத்துக்கு ஒருவர் மட்டும்தான் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது. அதேபோல் 15 வயது முதல் 50 வயதுக்குட்பட்டோருக்குத்தான் அனுமதி; அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளன. இதனடிப்படையில் உடற்பயிற்சி கூடங்கள் இன்று திறக்கப்பட்டிருக்கின்றன.
இதேபோல் 15 மாநகராட்சிகளில் ரூ10,000க்கும் குறைவான வருமானம் உள்ள சிறுவழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டிருக்கின்றன.
Recommended Video
தமிழகத்தில் ஏற்கனவே பிற பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.