விறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு?
தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஒரு மணி நேரத்தில் 25 பேருக்கு என்ற அடிப்படையில் ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
சென்னை: தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன. ஒரு மணி நேரத்தில் 25 பேருக்கு என்ற அடிப்படையில் ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
சனிக்கிழமையன்று காலை தடுப்பூசி விநியோக நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார். அதன் பின்பு தமிழக முதல்வர் மதுரையில் தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கி வைத்து உரையாற்றுவார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும்.
தமிழகம் முழுவதும் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் , நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், ஸ்டான்லி முதல்வர் பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளனர்.
சுகாதாரப்பணியாளர்கள் என்ற பட்டியலில் சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அடங்குவர்.
கொரோனா தடுப்பூசி : மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ஒரு மணி நேரத்தில் 25 பேருக்கு என்ற அடிப்படையில் ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இவ்வாறாக நாளை 166 மையங்களில் 19,073 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. சென்னையை பொறுத்தவரை 4 அரசு மருத்துவக் கல்லூரிகள், 1 தனியார் மருத்துவமனை உட்பட 12 இடங்களில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடாது. 14 நாட்கள் இடைவெளி அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களை பிரிக்க வேண்டும்.
முதல் டோஸில் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே மருந்தைதான் இரண்டாவது டோஸாகவும் வழங்க வேண்டும். தடுப்பூசியை மாற்றி போடக்கூடாது.
ரத்தப்போக்கு அல்லது ரத்தம் உறைதல் கோளாறு உள்ளவர்களுக்கு தடுப்பூசியை எச்சரிக்கையுடன் வழங்க வேண்டும்.
நோய்த்தொற்றின் அல்லது ஆர்டி-பி.சி.ஆர் பாசிடிவ் கொண்டவர்கள், நாட்பட்ட நோய்கள் இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்சிதை மாற்றம், சிறுநீரக பாதிப்பு நோயெதிர்ப்பு பாதுகாப்பு, எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களை அதிக கவனத்தில் கொண்டு தடுப்பூசி கொடுக்கலாம். கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு என்று பிரத்யேகமான தனித்தனி வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.