விசித்திரமான நடவடிக்கைகள்... இது யார் கொடுத்த ஐடியா...? தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது..?
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விசித்திரமாக உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரோனா பாதித்தவர் வீட்டு வாசல் முன்பு தகரத்தை வைத்து பாதையை மூடி தங்கள் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த இல்லத்தில் ஒரு தீ விபத்து நிகழ்ந்தால் அதில் இருப்பவர்கள் எப்படி வெளியேறுவார்கள் என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
சிக்கன் 65 ஓகே.. அதென்ன என்-95 சிக்கன்?.. மூலிகை ஆம்லெட்டாம்.. கலக்கும் தூங்கா நகரமான மதுரை!
கொரோனா பரவல்
தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊரடங்கு தொடங்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் கொரோனா வைரஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. முகக்கவசம், சமூக இடைவெளி, சுகாதாரம் பேணுதல் உள்ளிட்டவைகள் குறித்து அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை மக்கள் முழுமையாக இன்னும் கடைபிடிக்க தொடங்கவில்லை.
தனிமைப்படுத்துதல்
இதனிடையே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் வசித்த தெருக்கள் முழுமையாக சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. இதையடுத்து படிப்படியாக அந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது பற்றி அரசு யோசித்து வருகிறது. இந்தச் சூழலில் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் கொரோனா பாதித்தவர் இல்லம் முன்பு தகரத்தட்டி வைத்து பாதை அடைக்கப்பட்டுள்ளது.
பாதையை அடைப்பதா?
கொரோனா பாதித்தவர் இல்லம் என அக்கம்பக்கத்தினருக்கு தெரிவிக்க வேண்டியது சென்னை மாநகராட்சியின் கடமை. அதனை யாரும் மறுப்பதற்கோ, ஆட்சேபனை தெரிவிப்பதற்கோ இல்லை. ஆனால் அதற்காக வீட்டு வாசலில் தகரத்தை வைத்து பாதையை முழுமையாக அடைத்து சீல் வைத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் எதிர்பாராத விதமாக ஒரு தீ விபத்து ஏற்பட்டால் கூட தப்பிக்க முடியாமல் போகக்கூடும். இதனை உணர்ந்து கொரோனா பாதித்தவர்கள் இல்லங்களை அடையாளப்படுத்துவதில் மாற்று நடவடிக்கைகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
போஸ்டர்கள்
கொரோனா பாதித்தவர் இல்லம் என அக்கம்பக்கத்தினர் எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலும், அடையாளம் கண்டுக்கொள்ளக்கூடிய விதத்திலும் பளீர் நிறங்களில் கதவுகளில் ஸ்டிக்கர் ஒட்டலாம் அல்லது கதவில் இருந்து ஒரு அடி இடைவெளி விட்டு கயிறுகள் கட்டியிருக்கலாம். இல்லையேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரிடம் கொரோனா பாதித்த இல்லத்தின் கதவு எண்ணை முன் கூட்டியே தகவல் தெரிவிக்கலாம். இதையெல்லாம் விடுத்து தகரத்தை வைத்து பாதையை மூடுவது என்பது அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை ஆபத்தில் முடியக் கூடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.