கொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் இந்த பாதிப்பால் பலியாகியுள்ளனர்.
கொரோனா பிரச்சினை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து, தமிழகம் ஒரு சாதனையை தக்க வைத்து வந்தது. அது என்னவென்றால், இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருந்தது. எனவே, இங்கு அந்த வைரஸ் பெருமளவுக்கு வீரியமாக செயல்பட முடியவில்லை என்று மருத்துவர்கள் கணித்தனர்.
அதற்கேற்பதான் தினமும் 24 மணி நேர புள்ளி விவரத்தை அரசு வெளியிடும் போது அதில் வைரஸ் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை என்பது சிங்கிள் டிஜிட் என்ற அளவில் தான் இருக்கும்.
தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு
இரட்டை டிஜிட்
ஆனால் கடந்த சில நாட்களாக அது இரட்டை இலக்கத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு இன்று 19 நோயாளிகள் பலியாகி உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நேற்று 12 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்தனர். தமிழக பலி எண்ணிக்கை இரட்டை டிஜிட்டுக்கு போய் சில நாட்கள் ஆகிவிட்டன.
கடந்த சில நாட்கள்
கடந்த 3ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தில் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு முந்தைய தினம், அதாவது 2ம் தேதி ஒரே நாளில் 13 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு பலியாகினர். அப்போது மொத்த வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கை என்பது 197 என்ற அளவில் இருந்தது.
டிஸ்சார்ஜ் குறைவு
ஆனால் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில், கொரோனா வைரஸ் காரணமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை என்பது 251 என்ற அளவுக்கு இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இன்று, மொத்தம் 633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பரிசோதனை போதாது
தமிழகத்தில் இன்று 15389 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பரிசோதனை அளவு என்பது குறைவாக இருக்கிறது. பரிசோதனை அளவை விரைவாக விரிவு படுத்தினால் தான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இதுவரை பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 152 என்ற அளவில் இருக்கிறது. அதில் அதிகபட்சமாக 20 ஆயிரத்து 993 பேர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.