கொரோனா வைரஸ்.. சோப்பு போட்டு நம் கைகளை நன்கு தேய்த்து கழுவவேண்டும்.. கி.வீரமணி அட்வைஸ்
திராவிடர் கழக தலைவர் வீரமணி அட்வைஸ் தந்துள்ளார்
சென்னை: "கொரோனா வைரஸ் என்பது கட்சி பிரச்சனை இல்லை.. மக்கள் பிரச்சினை.. ஒன்றுபட்டு செயல்படுவோம்.. என்று கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளதுடன், "நாம் அடிக்கடி கைகளை கழுவவேண்டும்" என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் கடுமையான பீதியை கிளப்பி வருகிறது.. தமிழகத்திலும் இதன் தாக்கம் பீடித்துள்ளது.. இது சம்பந்தமான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் விஜய பாஸ்கரும் யாரும் பயப்பட தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "கெரோனா வைரஸ் கொல்லும் நோய்த்தொற்று தாக்கிய உடனே மரணம் ஏற்படாது. அந்த நோய் தீவிரமடைந்து மரணமடையும் விகிதம் என்பது வெறும் 3 சதவீதம் தான் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
'வருமுன் காப்போம்' என்பதை அடிப்படையாக கொண்டு அடிக்கடி கைகளை கழுவவேண்டும்.. முடிந்தவரை முழங்கை வரை கைகளை கழுவவேண்டும்... கொரோனா அறிகுறி அறிந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவவேண்டும்.
மக்கள் அலட்சியமாக இல்லாமல் இந்த விஷயத்தில் சுகாதாரத்துறை கூறுவதை கவனமாக பின்பற்றவேண்டும். இந்த நோய் பற்றி அலைப்பேசிகளில் கூறப்படும் அறிவுரை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. எல்லோருக்கும் புரியும் வகையில் தமிழிலும் சொல்லவேண்டும். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படட்டும். இது கட்சி பிரச்சினை இல்லை. மக்கள் பிரச்சினை. ஒன்றுபட்டு செயல்படுவோம் என வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.