இன்று மட்டும் 77 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 911... பலி 9... நலம்பெற்றவர்கள் 44
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 834-ல் இருந்து 911-ஆக இன்று உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது.
இதேபோல் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ல் இருந்து 9-ஆக இன்று அதிகரித்துள்ளது. தூத்துக்குடி சேர்ந்த பெண71 வயது மூதாட்டி ஒருவர் அங்குள்ள அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். உயிரிழந்த பெண்மணி தொடர்பான பயண வரலாறு விசாரனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாசிட்டிப் உறுதிசெய்யப்பட்ட 77 நபர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேர் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தான் வெளியிடுவார். ஆனால் இன்று தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு விவரம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.
இந்நிலையில் சற்றே ஆறுதல் அடையக் கூடிய வகையில் 44 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நலம்பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு மிகத் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குடும்பங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சண்முகம் கூறினார்.
சமூக விலகலை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும், மத்திய அரசின் நிதியை மட்டும் நம்பி எதிர்பார்த்து காத்திருக்காமல் மாநில அரசின் நிதியை கொண்டும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.
மேலு, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 2-வது கட்டத்தில் தான் இருப்பதாகவும், இன்னும் 3-ம் நிலையை தமிழகம் எட்டவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குழு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.