தீயாய் பரவிய வதந்தி.. கடைகளையே சுரண்டும் அளவுக்கு வண்டி வண்டியாய் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்
சென்னை: சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகள், சிறு கடைகள் மூடப்படும் என்ற வதந்தியால் பெரும்பாலான கடைகளில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி குவித்தனர்.
கொரோனா வந்தாலும் வந்தது உலகம் முழுவதும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகிறார்கள். வரும் 31ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அது போல் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான சேவைகளும் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
விளக்கம்
இந்த நிலையில் சிறு கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவை மூடப்படும் என்ற வதந்தி காலை முதலே பரவியது. இதனால் மக்கள் கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்றைய தினம் விளக்கம் அளித்துவிட்டது.
ஓரிரு நாட்கள்
பெரிய கடைகள் மட்டுமே மூடப்படும் என்றும் சிறிய கடைகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அரசு அறிவித்தது. எனினும் இன்னும் ஓரிரு நாட்களில் சிறிய கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்படும் என்ற வதந்தியை மக்கள் நம்பி நேற்று முழுவதும் தீயாய் வேலை பார்த்தனர். சென்னை முகப்பேரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில காய்கறி பிரிவில் பெரும்பாலான காய்கறிகள் இரவு 8 மணிக்கெல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன.
உருளை
முக்கியமாக வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கள் விற்றுத் தீர்ந்தன. வாடிய வதங்கிய அழுகிய பொருட்கள் தவிர்த்து மக்கள் சுத்தமாக துடைத்தெடுத்து சென்றுவிட்டனர். அது போல் மளிகை சாமான்களில் காபி தூள், சர்க்கரை, கோதுமை மாவு, பருப்பு வகைகள், அரிசி, நூடுல்ஸ், பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை விற்று தீர்ந்தன. அதிலும் வடஇந்தியர்கள் கோதுமை மாவுகளை வழக்கத்துக்கு மாறாக 10 கிலோ அளவுக்கு வாங்கி குவித்தனர்.
கடை மூடல்
அந்த கடையில் வார இறுதியில் மட்டுமே அத்தகைய கூட்டம் இருக்கும். ஆனால் இந்த வதந்தி பரவியதால் நேற்று வாகனம் நிறுத்த கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மக்களிடம் கேட்டபோது, இன்னும் ஓரிரு நாட்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்படும் என்ற தகவலை அடுத்து பொருட்களை வாங்க வந்தோம். அரசு என்னதான் விளக்கம் அளித்தாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஏசி போடப்பட்டுள்ளதால் இதன் மூலம் நோய் எளிதில் பரவும் என்ற காரணத்தை காட்டி மூடிவிட்டால் என்ன செய்வது?
கோயம்பேடு
சிறு கடைகளில் நாங்கள் விரும்பும் பிராண்டுகள், நாங்களே பொருட்களை எடுத்து வைக்கும் வசதிகள் இல்லை. இதனால்தான் அவசர அவசரமாக வந்தோம் என்றனர். கோயம்பேடு மார்க்கெட்டுகளும் மூடப்படும் என்று வேரு யாரோ கொளுத்தி போட்டுவிட்டனர். இதையடுத்து கிடைக்கிற காய்கறிகளை மக்கள் கொண்டு சென்றனர். இந்த மாத முதல் வாரத்தில் மளிகை சாமான்கள் வாங்கியவர்கள் கூட இன்னும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கினர்.
மளிகை பொருட்கள்
பொதுவாக கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல் , மே மாதங்களில் மக்கள் பல்வேறு ஊர்களில் வசிக்கும் தங்கள் உறவினர் வீடுகளுக்கு செல்வர். இதனால் மளிகை பொருட்களை ஜூன் மாதத்தில்தான் வாங்குவர். ஆனால் தற்போது எந்த ஊர்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மளிகை பொருட்களை பல கிலோ கணக்கில் வாங்கி குவித்தனர். இவர்கள் செய்வதை பார்த்தால் ஏதோ உள்நாட்டு போர் ஏற்படுவதற்கு முன்னர் ஆயத்தம் ஆவதை போல் தெரிந்தது.
விளம்பரங்கள்
கொரோனாவை காரணம் காட்டி சிலர் சானிடைசர்களையும் கடைகளில் விற்கத் தொடங்கினர். இந்த சூப்பர் மார்க்கெட்டில் நாம் பார்த்த சானிடைசரில் கொரோனா வைரஸை தடுக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் விலை வழக்கத்துக்கு மாறாக 270 ரூபாய்க்கு விற்கப்பட்டிருந்தது. அதையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என கலங்கும் மக்களிடையே இது போன்ற விளம்பரங்கள் மூலம் சுரண்டி வருகின்றனர்.