யாரெல்லாம் கோயம்பேடுக்கு சென்று வந்தீர்கள்.. உடனே டெஸ்ட் எடுத்தாகணும்.. அன்புமணி அதிரடி அறிக்கை
சென்னை: லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் கோயம்பேட்டில் குவிந்தார்களே.. இந்த மார்க்கெட்தான் தமிழகத்தில் நோய்த்தொற்று மையமாக மாறியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று டாக்டர் அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார்.. யாரெல்லாம் கோயம்பேட்டுக்கு சென்று வந்தார்களோ, அவர்கள் எல்லாருக்குமே உடனே டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் முக்கியமான அலர்ட் ஒன்றினை செய்துள்ளார்.
Recommended Video
கொரோனா பரவல் தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்றும், அந்த பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆரம்பத்தில் இருந்தே முக்கியத்துவம் தந்து வேண்டுகோளை வைத்து வருபவர் டாக்டர் ராமதாஸ்.. ஊரடங்கு தளர்த்தல் என்ற பேச்சே கூடாது என்று கட் & ரைட்டாக சொல்லி வந்தார். ஓயாமல் மக்களுக்கு அறிவுறுத்தி கொண்டே இருக்கிறார்.
முக்கியமாக தமிழக அரசுக்கும் மிக முக்கிய ஆலோசனைகளையும், உத்திகளையும் தந்து வருகிறார்.. எனினும் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது.. குறிப்பாக தலைநகரம் மிரட்டி கொண்டிருக்கிறது. அதிலும் கோயம்பேடு நினைத்தாலே பீதி கிளம்புகிறது. தற்போது அடுத்தக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அன்புமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
காய்கறி
சென்னை கோயம்பேடு சந்தை புதிய கொரோனா நோய்த் தொற்று மையமாக உருவெடுத்திருப்பதாக தெரிகிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்களுக்கும், அங்கு காய்கறி வாங்கவும், விற்கவும் சென்று வந்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இதை உறுதி செய்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதாக தெரிய வந்ததையடுத்து, அங்கு கடந்த சில நாட்களாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகள்
கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள், அங்கு அடிக்கடி சென்று வந்த பிற வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கடந்த சில நாட்களாக கொரோனா ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 40 பேருக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயம்பேடு சந்தை வழியாக ஏற்பட்ட தொற்றுகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
நோய்த் தொற்று
கோயம்பேடு சந்தை மூலமான நோய்த்தொற்று சென்னையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழகம் முழுவதும் நீள்கிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றி அரியலூர் மாவட்டத்திலுள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்ற 19 பேருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு தொழிலாளி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு தொழிலாளிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
கடலூர்
கோயம்பேடு சந்தையில் பணியாற்றி கடலூர் மாவட்டத்திற்கு திரும்பிய இரு தொழிலாளர்களுக்கு நேற்று முன்நாள் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தவிர கோயம்பேடு சந்தையில் பணியாற்றி திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கடலூர் மாவட்டத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா உறுதியாகும் எனத் தெரியவில்லை.
மோசமடையும்
கோயம்பேடு சந்தையில் கடந்த பல நாட்களுக்கு முன்பே கொரோனாத் தொற்று நிகழத் தொடங்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அத்தகைய சூழலில் அங்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களை கண்டுபிடித்து சோதனை செய்து குணப்படுத்தாவிட்டால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவி, நிலைமை மோசமடையக்கூடும். இதைத் தடுக்கும் வகையில் கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள், மற்றும் அங்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு ஏதேனும் சில வகைப்பாடுகளின் அடிப்படையில் சோதனை செய்து அச்சத்தைப் போக்க வேண்டும்.
தமிழக அரசு
அங்கு சென்று வந்தவர்களில் யாருக்கெல்லாம் சோதனை தேவை என்பதை அறிவித்து, அவர்கள் தாங்களாக முன்வந்து சோதனை செய்து கொள்ள அரசு அறிவுறுத்த வேண்டும். மற்றொருபுறம் கோயம்பேடு சந்தையில் தற்போது கடைகளை நடத்தி வரும் வணிகர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களிடம் தங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுமோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் அச்சத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று கேட்டுக் கொண்டுள்ளார்.