"காப்பாத்துங்க.. ப்ளீஸ்.. சாப்பாடு இல்லை, துணியில்லை" மலேசியா ஏர்போர்ட்டில் தவிக்கும் 48 இந்தியர்கள்
சென்னை: "எங்களை காப்பாத்துங்க.. சாப்பாடு இல்லை, உடுத்திக்க துணியில்லை.. 3 நாளா ஒரே டிரஸ்ஸில் தவித்து வருகிறோம்" என்று 48 இந்தியர்கள் மலேசிய ஏர்போர்ட்டில் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலக மக்களை பீடித்து கொண்டுள்ளது.. அந்த வகையில் தொற்றுக்கு அதிக பாதிப்புக்குள்ளானதில் மலேசியாவும் ஒன்று... தற்போது பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 790- தாண்டி விட்டது.. கடந்த மார்ச் 18-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 117 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
அதனால் அன்றைய நாளில்தான் மலேசிய அரசாங்கம் அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கையில் எடுத்தது.. பொது நடமாட்டத்துக்கு தடை விதித்தது.. இந்த தடையை மீறுவோர் மீது ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.. அதனால் மொத்த மலேசியாவும் அன்றைய தினமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விமானங்கள்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே 18-ம் தேதிதான் மலேசியா ஏர்போர்ட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.. ஆனால் விஷயத்தை கேள்விப்பட்டதும், அவர்கள் எல்லாரையுமே அந்தந்த நாட்டினர் சிறப்பு விமானங்களை அனுப்பி பத்திரமாக அழைத்து சென்றுவிட்டனர்.. இதில் கடைசியாக தங்கியுள்ளது 45 பேர் மட்டுமே.. இவர்கள் அனைவருமே இந்தியர்கள்.. ஆனால் அங்கிருந்து இந்தியா செல்ல மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் முறைப்படி அனுமதியை வாங்கினால் மட்டுமே அனுப்பி வைப்போம் என்று மலேசியா விமான நிலையம் உறுதியாக தெரிவித்துவிட்டது.
பயணிகள்
உடைமைகள் அனைத்தையும் இமிகிரேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிளைட் ஏறுவதற்காக தயாராக இருந்தபோதுதான் இந்த அதிர்ச்சி தகவல் 48 பேருக்கும் தெரியவந்தது.. அதனால் ஏர்போர்ட்டிலேயே கடந்த 3 நாட்களாக தங்கி உள்ளனர்.. கொரோனா பீதி எதிரொலியாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 84 விமான சேவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த 48 பேரையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
லக்கேஜ்கள்
இதுகுறித்து மலேசியா ஏர்போர்ட்டில் தவித்து வரும் பயணிகளில் ஒருவரான செல்வராஜ் என்பவரை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம்.. அப்போது அவர் நம்மிடம் வருத்தமும் கலக்கமும் நிறைந்த குரலில் சொன்னதாவது: "18-ம் தேதி ஃபிளைட் ஏறுவதற்காக வந்தோம்.. செக்கிங்-ல் லக்கேஜ் எல்லாவற்றையும் அனுப்பிவிட்டு பிளைட் ஏற தயாராகும்போதுதான் இப்படி சொல்லிட்டாங்க.. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம்.
தூதரகம்
ஆனால் இந்தியாவில் நிலைமை தீவிரமாக உள்ளதாலும், எங்கள் உடல்நலம் கருதியும் வருகிற 31-ம் தேதி வரை இந்தியாவுக்கு அழைத்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டனர்... மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமும் எங்களுக்கு எந்த ஏற்பாடும் செய்து தரவில்லை.. எங்களில் பெரும்பாலானோர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 4 பெண்களும் உள்ளனர்.. படுக்க இடம் இல்லை.. சாப்பாடு இல்லை.. 3 நாளாக ஒரே டிரஸ்ஸில் இந்த ஏர்போர்ட் பகுதியிலேயே தங்கி உள்ளோம்.. குளிர் அதிகமாக இருக்கிறது.. இப்போது எங்களுக்கு உடம்பு சரியில்லாமலும் போய்விட்டது.
கண்ணீர்
144 உத்தரவு மலேசியாவில் உள்ளதால் எங்களால் உள்ளே நுழைய முடியாது.. எங்கேயும் தங்கவும் முடியாது.. மலேசியாவில் இருக்கவும் முடியாமல், இந்தியாவுக்கும் திரும்பி வரவும் முடியாமல் நடுவில் சிக்கி தவித்து வருகிறோம்.. 22-ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் மொத்த விமான சேவையும் நிறுத்தப்படும் என்ற நிலை உள்ளது.. அதனால் அதற்கு முன்னதாகவே வெளியுறவுத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு எங்களை பத்திரமாக இந்தியா கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.. ரொம்ப சிரமத்தில் தவித்து வருகிறோம்" என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.